கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபை (முனுஆஊ) 14.02.2016 ஆம் திகதி சாய்ந்தமருது பிஸ்மில்லாஹ் ஹோட்டல் மண்டபத்தில் 'உத்தேச அரசியல் யாப்பும் முஸ்லிம்களும்' என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை நடாத்தியது. இதில் அம்பாரை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களில் இருந்தும் புத்திஜீவிகளள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர். இச்செயலமர்வின் முடிவில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
- 'புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம்களும்.' என்ற விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக மேற்கொண்டதாகத் தெரியவரவில்லை. ஏனைய சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த கட்சிகள் இதற்காக சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களையும் துறைசார்ந்த நிபுணர்களையும் கொண்ட குழுக்களை அமைத்து தமக்கான முன்மொழிவுகளை வரைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவரும் இச்சந்தர்பத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்துவருவதானது மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை மீறும் செயல் என்பதை இச்சபை வருத்தத்துடன்; தெரிவிக்கினறது.
- முஸ்லிம் அரசியல் கட்சிகள், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் எத்தகைய தீர்மாணங்களை எடுக்கும் சந்தர்ப்பத்திலும் அம்மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களினதும், புலமையாளர்களினதும் ஆலோசனைகளை அவசியம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- கிழக்கு மாகாணம், வரலாறு நெடுகிலும் இருந்தது போல தனது தனித்துவமான இயல்பையும் இயற்கையையும், சமய, கலை, கலாச்சார விழுவியங்களையும் பேணும் வண்ணம் தொடர்ந்தும் தனியான ஒரு மாகாணமாகவே இருத்தல் வேண்டும்.
- கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் 1978 ஆம் ஆண்டின் யாப்பிற்கமைய உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழித்துவிடாமல் அரசியல் யாப்பின் 19ஆம் திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
- கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் 'கிழக்கிலங்கை முஸ்லிம் மஜிலிஸ்' என்ற பெயரில் புதியதொரு அமைப்பு உருவாக்கப்படும். அதில் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் சார்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிருவாகிகள் உள்வாங்கப்படுவர்.
- உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை திரட்டும் குழுவினரின் அம்பாரை மாவட்டத்திற்கான பெப்ரவரி 27,29 ஆம் திகதிகளின் அமர்வுகள் கரையோர பிரதேச இடங்களிலும் நடாத்தப்படல் வேண்டும்.

0 comments:
Post a Comment