எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்
வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்
வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத்
பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தல் அவதானிப்பு பணிகளில் கண்காணிப்பாளர்களாக ஈடுபட
வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட்
தலைமையிலான குழுவினர் இன்று (29) அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளை அமைச்சில் சந்தித்த போதே
மேற்கண்டவாறு எடுத்துரைத்தார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
தற்போதைய பிரசாரப் பணிகளில் ஈடுபடும் கட்சியொன்றின் வேட்பாளருக்கு ஆதரவு
திரட்டும் அவர் சார்பில் பரப்புரை செய்வோர், சிறுபான்மை சமூகத்தை
அச்சுறுத்தும் தொனியிலும், கஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டி நேரிடும் என்ற
எச்சரிக்கை தொனியிலும் உரையாற்றிவருகின்றனர்.
சுயாதீனமாக வாக்களிக்கும் வாக்காளர்களை அதிலிருந்து தடுக்கும் அல்லது
ஒதுங்கும் செயலாகவே இதனை கருதுகின்றோம்.ஜனநாயக நாடொன்றில் வாக்களிக்கும்
சுதந்திரமென்பது மிகவும் முக்கியமானது.இதனை தடுப்பது என்பது மிகவும்
பாரதுாரமான செயலாகும்.மக்களுக்காக ஆட்சிக்கு வருபவர்கள் தமது
கொள்கையினையும் எதிர்கால திட்டங்களையும் சொல்லி வாக்குகளை கேட்பது தான்
சிறந்த நடைமுறை.
இந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு
வழங்குகின்றது. இவரை முன்னிறுத்தியே எமது பிரசாரங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன.ஆனால் நாம் பிரதிநிதித்திதுவப்படுத்தும் எமது
கட்சிக்கு ஆதரவளிக்கும் வாக்காளர்களை பலவந்தப்படுத்தி அவர்களிடம் வாக்கை
திரட்டும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
இந்த தேர்தலை செவ்வனே நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழு வலுவான சட்ட
திட்டங்களையும் நடவடிக்கைகளையும் பிரயோகித்து வருகிறது.
.சுதந்திரமானதும்,நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எமது கட்சி
தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்கிவருகிறது.அமைச்சர் றிசாத்
பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன்,முன்னாள்
வெளிவிவகார பிரதி அமைச்சரும்,கட்சியின் பொருளாளருமான ஹூசைன் பைலா,கட்சியின்
சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கலாநிதி யூசுப் கே
மரைக்கார்,கட்சியின் முக்கியஸ்தர் றியாஸ் சாலி இணைப்பு செயலாளர் இர்ஷாத்
ரஹ்மத்துல்லா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.


0 comments:
Post a Comment