ஜனாதிபதி வேட்பாளரின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோத்தபாய அமெரிக்கா பிரஜையா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த முடியாது என அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க
சட்டத்துக்கு அமைய விசா மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் ஒருவரின் தனிப்பட்ட
தகவல்களை தம்மால் வழங்க முடியாது என, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்கா குடியுரிமையை இரத்துச் செய்தவர்களின்
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான புதிய பட்டியலை அமெரிக்க திறைசேரி
திணைக்களத்தின் தேசிய வருமான சேவை வெளியிட்டுள்ளது.
இந்த
பட்டியலுக்கு அமைய அமெரிக்காவின் குடியுரிமையை இரத்துச் செய்தவர்கள்,
தொடர்ந்தும் அந்நாட்டில் வருமான வரியை செலுத்த தேவையில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும்
நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் வெளியிடப்படவில்லை. இதனடிப்படையில்
கோத்தபாய ராஜபக்ச இன்னும் அமெரிக்க பிரஜை என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில்
அமெரிக்க தூரகத்திடம் விளக்கம் கோரிய நிலையில், அதற்கு மறுப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கோத்தபாயவின் விபரங்களை வெளியிட முடியாது எனவும்
அறிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸிவின்
அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டை அவரது ஜனாதிபதி
சட்டத்தரணி அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை
நீக்கிக் கொண்டமை தொடர்பான முழுமையான ஆவணங்களும் தேர்தல்கள் ஆணையாளரிடம்
கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - தமிழ்வின்



0 comments:
Post a Comment