முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற
விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்கும் போராட்டத்தில் சந்திரிக்கா ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான மாநாடு இன்று சுகததாஸ உள்ளக
அரங்கில் இடம்பெற்றது.
மாநாட்டில் பாரிய அளவிலானோர் கலந்து கொண்டமை
குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும்
அதிர்ச்சி அடைந்துள்ளது.
சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த உறுப்பினர்களே இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவுடன இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் குழுவினர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இந்த மாநாடு
நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, எந்த
ஒரு காரணத்திற்காகவும் தான் தாமரை மொட்டிற்கு வாக்களிக்க மாட்டேன் என
குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி
வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்
இன்றைய மாநாட்டில் பெருமளவு உறுப்பினர்கள் கலந்து கொண்டமை மஹிந்த அணிக்கு
பெரும் பின்னடைவு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை
இன்றைய மாநாட்டிக்கு பெருமளவு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும்,
அது தோல்வியில் முடிவடைந்ததாக மஹிந்த ஆதரவு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment