பொத்துவில் மற்றும் பானமை பிரதேசங்களில் 23 பேரை சுகாதார பிரிவினர் நேற்று மாலை (26.04.2020) தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் கேசரிக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
17 பேர் பானமை சிங்கபுர எனும் பிரதேசத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். கடற்படையை சேர்ந்த ஒருவர் இங்கு வந்து சிலருடன்; பழகியுள்ளார். அதே வேளை அவருக்கும் வெலிசறைக்கும் சம்பந்தமல்ல. குறிப்பிட்ட இந்த வீரர் விடுமுறையில் வந்து சில நாட்கள் இருந்து விட்டு, பின்னர் அவரின் பாட்டி மரணித்த வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இங்கு அதாவது பானமை பிரதேசத்திற்கு வருகை தந்திருக்கின்றார்.
இவர் இங்கு வந்து கடற்படை அதிகாரிகளினதும், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது செயற்பட்டுள்ளார். இதனால், இவரை அம்பாரை சுகாதார பிராந்திய பணிமனை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. இவர் பற்றிய பரிசோதனை முடிவுகள் நாளை (27.04.2020) கிடைக்கும். இதே வேளை இவரோடு தொடர்புகளை பேணியவர்கள் என்ற அடிப்படையில் பானமை சிங்கபுர எனும் பிரதேசத்தில் 17 பேரை வீடுகளில் தன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதி உத்தியோகத்தரின் கணவரான மாத்தறையை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவரும் கடற்படை அதிகாரிகளினதும், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது செயற்பட்டுள்ளார். அவர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இதன் போது அவருடன் வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலரும் பழகியுள்ளார்கள். இந்த அடிப்படையில் பொத்துவில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 06 பேர் விடுதிகளில் தன்மைப்படுத்தி வைக்கபட்டுள்ளார்கள்.
கடற்படை சிப்பாய்கள் அதிகாரிகளின் அறிவறுத்தல்களை முறையாக பின்பற்றாது இவ்வாறு நடந்து கொள்வதனால் வேறு விபரிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டிள்ளது. இதே வேளை, வெளிமாவட்டங்களில் இருந்து கல்முனை பிராந்திய சுகாதார பிரதேசத்திற்குள் வருகை தரும் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த உத்தியோகம் செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் எமது சுகாதார பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும். அத்தோடு. எமது அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்க வேண்டும். அவர்களை நாங்கள் பொது மக்களின் பாதுகாப்பை கருதி தனிமைப்படுத்தி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதனை மீறிச் செயற்படும் போது நாம் அவரோடு பழகிய அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நடவடிக்கைகள் யாவும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுனண் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment