கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த இலங்கையின் தற்போதைய நிலைமையானது இத்தாலியை ஒத்த வகையில் பயணிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேலியகொட மீன்வாடியில் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி மூலமாக கொழும்பில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இப்போது இலங்கையின் நிலவரம் குறித்து அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறுகையில்,
- கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் ஒரு ஸ்திரமில்லாத நிலையில் முன் நகர்ந்து கொண்டுள்ளது. இது குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னாயத்த நடவடிக்கைகள் கூட தோல்வியில் முடிவடையும் நிலைமையே காணப்படுகின்றன. உலக நாடுகள் அனைத்துமே இன்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விடயத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இதற்கு காரணம் என்னவெனில் கொரோனா வைரஸ பரவல் குறித்து சரியாகக் கண்டறியப்படாமையாகும். ஆகவே, இப்போது நாம் முகங் கொடுக்கும் பிரச்சினைக்கு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை என்ன நடக்குமென்று எவருக்குமே தெரியாத நிலையில், இப்போது நாம் முகங் கொடுக்கும் சவால்களுக்கு இப்போதே தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.
ஓவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாளாந்தம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகவே நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. நோயாளர்கள் குறித்து மிகக் குறைவான அறிகுறிகளே தென்படுகின்றன. ஆகவே சாதாரண நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
- பேலியக்கொட மீன் சந்தையில் நோயாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டார். அவருடன் பலர் பழகி இருக்க வேண்டும். அவர்கள் கொழும்பில் பல பகுதிகளுக்கு சென்றிருக்க வேண்டும். அவர்களை இப்போது கண்டறிய வேண்டியுள்ளது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதனை அனைவுரம் உணர வேண்டம். ஒரு நோயாளர் முழு நாட்டையும் மோசமாக்க போதுமானவர். இதில் எந்த நோயாளர்களையும் நாம் குற்றம் சுமத்தவில்லை. ஆனால், ஒரு நோயாளரை விட்டு வைத்தாலும் முழு நாட்டையும் பாதிக்க அது காரணமாக அமையும்.
இலங்கை இப்போதைய நிலையில் இத்தாலியின் நிலைமையை நோக்கி பயணிக்கின்றது. இத்தாலியின் நோயாளர் குறித்த வரைபைப் போன்று இன்று இலங்கையின் வரைபும் காட்டுகின்றது. இதனை சாதாரணமாக நினைத்தால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக அமையலாம். இலங்கையின் இப்போதைய நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளதென்பதே உண்மையாகும். ஆரசாங்கம் அதிகாரிகள், மக்கள் அனைவரும் இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் மே மாதம் முதலாம் வாரம் முடியும் வரையில் நாட்டின் நிலைமைகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இந்த கால கட்டத்தில் தொற்று நோய் பரவல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.
- அரசாங்கம் சில விடயங்களில் தவறிழைக்கின்றது. மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியமை மிக மோசமானது. இதனை நாம் ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்தோம். ஜனாதிபதியும் மதுபானசாலைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே போல் ஏனைய சில வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவும் வலியுறுத்தி வருகின்றோம். எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற் கொள்ள வேண்டும். எனினும், அதனை விடவும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார்.
வீரகேசரி -
வீரகேசரி -
0 comments:
Post a Comment