பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 15ஆம் திகதி மோசமடைந்தது. இதனையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையிலேயே, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, 1946ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடல் பாடி வருகின்றார்.
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள அவர், உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.
இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011ம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
இதேவேளை தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் பல பாடல்கள் அவர் குரலை சொந்தமாகி கொண்டிருந்த போதும் அவர் தமிழீழ விடுதலை போராட்ட வராற்றின் பல பாடல்களுக்கு கொடுப்பனவு பெறுவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருந்ததுடன், இலங்கை தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சிறப்பான ஓர் உறவை கொண்டிருந்தார்.
இவரின் இழப்பானது அவரது குடும்ப உறுப்பினர்களை தாண்டி இசை உலகையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை, தமிழினத்திற்காக இசை மூலமாக அவர் செய்த சேவை இனி கிட்டாது என்பதை எண்ணி தற்போது தமிழினமே பெருந்துயரில் ஆழந்துள்ளது.
சங்கீதத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது சக கலைஞர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் தோள் கொடுத்து தன் மனிதத்தை நிரூபித்தவர் என்பதை அனைவரும் அறிவர்.
இவ்வாறான தூய்மை உள்ளம் கொண்ட பாடும் நிலாவின் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்துள்ளமையானது அனைவரையும் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment