• Latest News

    September 17, 2020

    தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

    தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் பொலிஸாரினால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

    போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

    கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ் கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து இலங்கை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரி பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

    பிரதீப் குமார் பண்டார தனது சகோதரர் மூலம் மர கடையின் உரிமையாளருக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்தது பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மூட்டையில் அச்சிடப்பட்டிருந்த முத்திரையும், தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் போதைப்பொருள் மூட்டைகளில் உள்ள முத்திரையும் ஒன்றாக இருந்ததால் பிரதீப் குமார் பண்டார இலங்கை பொலிஸாரிடம் இருந்து தன்னை காப்பற்றி கொள்ள மன்னாரில் இருந்து சட்ட விரோதமாக படகு ஒன்றில் தமிழகம் தப்பி சென்றார்.

    மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டார விசாரணைக்கு பின் இராமேஸ்வரம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டாரவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில், இன்று சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்பொழுது குமார் பண்டாராவை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    விசாரணை முடிந்ததும், அவரை எதிர் வரும் 21ஆம் திகதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top