• Latest News

    February 07, 2014

    சாய்ந்தமருது தோணா விரைவில் சுத்தமாக்கப்படவுள்ளது. -கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர்-

    எம்.வை.அமீர்;
    கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் 13 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டுடனும் கல்முனை மாநகரசபையின் பூரண ஒத்துழைப்புடனும் சாய்ந்தமருது தோணா விரைவில் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக அடுத்த கட்டமாக கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் குவிந்து கிடக்கும் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் தெரிவித்தார்.



    கடந்த 2013-11-07ம் திகதி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபையின், முஸ்லிம் காங்கிரஸ் சார்பு உறுப்பினர்களின் தலைவருமான எ.எம்.ஜெமீலின் அழைப்பின்பேரில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஏற்பாடு செய்திருந்த தோணாவை அபிவிருத்தி செய்வது தொடர்பான  கலந்துரையாடல் ஒன்றின் போது எட்டப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கமைவாக மாகாணசபை உறுப்பினர் எ.எம்.ஜெமீலின் பணிப்பின் பெயரில் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி மற்றும் மாநகர சபையின் பொறியியலலாளர் ஏ.ஜே.ஜௌசி போன்றோரால் வரையப்பட்ட சாய்ந்தமருது தோணாவை சுத்தமாக்குவது தொடர்பான வேலைத்திட்ட வரைபை தான் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் இந்த நிதியைப்பெறுவதில் மாகாணசபை உறுப்பினர் எ.எம்.ஜெமீலும் கல்முனை மாநகர மேயர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியாப்பர் போன்றோரும் தனக்கு பக்க துணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

    அவசரமாக ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டம் தோணாவை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த நன்மையளிக்கும் என்றும் தோணா சுத்தப்படுத்தப்படும் அதேவேளை தோணாவை அண்டிய பிரதேச மக்களுக்கு தொடர்சச்சியாக சுத்தத்தை பேணுவது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளதாகவும் இருமருங்கிலும் மரக்கன்றுகளும் நடப்படவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

    வேலைத்திட்டங்களை கல்முனை மாநகரசபை மேற்கொள்ளும் என்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி கல்முனை மாநகரசபைக்கு உடன்கிடைக்கும் என்றும்  கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வேலைகளை மேற்பார்வை செய்யும் என்றும் தெரிவித்தார்.
    அதேவேளை இந்நிதியைக் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்தம் செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு மேயர்  நிசாம் காரியப்பர், மாநகர ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    குறித்த தோணாவை  சுத்தம் செய்யும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதிக்கு மேலதிகமாக நிதி தேவைப்படுமாயின் அதனை மாநகர சபை மூலம் ஒதுக்கித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

    சாய்ந்தமருது ஊரை ஊடறுத்து செல்லும் இந்த தோணா கடந்த பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருவதால் நீரோட்டம் தடைப்பட்ட நிலையில்- துர்நாற்றம் வீசி வருகின்றது.

    இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வராக நிசாம் காரியப்பர் பதவியேற்றதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வேண்டுகோளையேற்று சாய்ந்தமருதுக்கான தனது அபிவிருத்தித் திட்டங்களுள் இத் தோணாவை சுத்தம் செய்யும் வேலைத் திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி  அதற்கான நகல் வரைபை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்து- கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் முன்னெடுத்து வந்தார். இதன் பயனாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் தனது திணைக்களத்தின் ஊடாக இதற்கான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்திருந்தார்.

    கலம் காலமாக வெட்டு வாய்க்காலினதும் சாய்ந்தமருது, காரைதிவு மாளிகைக்காடு போன்ற ஊர்களினதும் பிரதான வடிச்சல் வாய்க்கலாகவும் இதையும் விட பின்னோக்கும் போது இப்பிராந்திய மக்களின் ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் மத்திய தளமாகவும் (உப்பு வடித்தல், மீன் பிடித்தல்  கல் அகல்தல் ஓலைகளை ஊறவைத்தல்) பொழுது போக்கு தளமாகவும் ( நீச்சலடித்தல்,தோணி சவாரி செய்தல்) திகழ்ந்துள்ளது.

    கடந்த 2004ல் இடம்பெற்ற சுனாமி பேரலையின் போது ஊருக்குள் நுழைந்த கடல் நீர் விரைவாக வடிந்து செல்ல பிரதான வாயிலாகவும் இத்தோணா அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
    சுனாமியின் பின்னரான அபிவிருத்தியின் போது சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்து பிராந்தியத்தின் சிறந்த வர்த்தக மற்றும் பொழுது போக்கு தளமாக மாற்றும் நோக்கோடு அப்போதைய கல்முனை மேயராக இருந்த தற்போதைய கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாரிய முன்னெடுப்பு ஒன்றை மேட்கொண்டிருந்தார். இதன் பயனாக ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை, கல்முனை மாநகர சபையுடன் செய்து, அபிவிருத்திக்கான சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியாக திட்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் செய்யப்படதாக அறியமுடியவில்லை.

    இருந்த போதும் காலத்துக்கு காலம் கல்முனை மாநகரசபை இடைக்கால திட்ட அடிப்படையில் சாய்ந்தமருது தோணாவை சுத்தம் செய்துவந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வாறான சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடைக்கால தீர்வாக அமைகின்ற போதிலும் மக்கள் நிரந்தரமான தீர்வு ஒன்றினையே வேண்டி நிற்கின்றனர்.

    சாய்ந்தமருது தோணாவின் நிலை இதே நிலையில் விடபப்படுமாக இருக்குமானால் சுகாதாரத்துக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். கொலை செய்த உடலங்களையும் செத்த பிராணிகளையும் வீட்டுக்களிவுகளையும் வீசும் தளமாகவே சாய்ந்தமருது தோணா உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.

    ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் மேற்கொண்ட திட்டத்தை கல்முனை மாநகரசபை மீள்பரிசீலனை செய்து, கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபையின், முஸ்லிம் காங்கிரஸ் சார்பு உறுப்பினர்களின் தலைவருமான எ.எம்.ஜெமீல் போன்றோர்களினதும் ஒத்துழைப்புடன் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப்பெற்று சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்ய கல்முனை மேயர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியாப்பர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிராந்திய மக்கள் எதிர்பார்த்து நிற்க்கின்றனர்.

    தனியாக பொழுது போக்கு இடத்துக்கு பாரிய அளவில் நீதியை ஒதுக்குவதை விட சுகாதாரம்இபாதுகாப்பு, பிரதேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தினுடான பொழுது போக்கு மற்றும் வருமானத்தை தரக்கூடிய திட்டங்களுக்கு  விசேடமாக சாய்ந்தமருது தோணாவை போன்ற இடங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கல்முனை மாநகரசபையும் பிரதேச அரசியல்வாதிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும் என மக்கள் வேண்டி நிற்கின்றனர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது தோணா விரைவில் சுத்தமாக்கப்படவுள்ளது. -கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர்- Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top