• Latest News

    February 07, 2014

    சர்வதேச சமூகம் கூடுதலான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்தால் நல்லிணக்க முன்னேடுப்புகளை பாதிக்கச் செயயும்: ரவூப் ஹக்கிம்

    இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு சம்பந்தமான விடயங்களில் சர்வதேச சமூகம் கூடுதலான அழுத்தங்களை பிரயோகிக்குமானால், அது எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இனங்களுக்கிடையிலான விரிசலையும், துருவப்படுத்தலையும் அதிகரிக்கவும், நல்லிணக்க முன்னேடுப்புகளை பாதிப்படையவும் செய்யக்கூடுமென்று தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜிஒப் டொயிட்ஜ்யிடம் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
    சர்வதேச சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், சகல இன மக்களினதும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தயாராகிவருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார் அத்துடன், உள்நாட்டில் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்வமாக இருப்பதாகவும், அதுபற்றி அவர் தம்மிடம் நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவர்; தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

    இலங்கையின் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளில் அதிக அக்கறை காண்பித்து வரும் தென்னாபிரிக்க குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜிஒப் டொயிட்ஜ், அந்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் நிறுவனம் ஒன்றான மாற்றமுறுதலை ஊக்குவிக்கும் அமைப்பின் பணிப்பாளர் ஐவர் எச். ஜென்கின்ஸ் சகிதம் நீதியமைச்சர் ஹக்கீமை வியாழக்கிழமை (06) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

    அப்பொழுது இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே சாலச்சிறந்ததாக அமையுமென்று தாம் கருதுவதாக உயர்ஸ்தானிகர் ஜிஒப் டொயிட்ஜ் மற்றும் ஐவர் எச். ஜென்கின்ஸ் ஆகியோர் அமைச்சர் ஹக்கீமிடம் கூறியதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை அவற்றைப் பற்றி ஆராய்வதற்கு ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை கையாள்வதே மிகவும் உகந்தது என்றனர். அதேவேளையில் அதற்குச் சமாந்தரமாக பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் அரசியல் தீர்வுக்கான பயனுள்ள பேச்சுவார்த்தை ஒன்றின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தென்னாபிரிக்காவின் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் செயல்பாடுகளை ஒத்த நடைமுறைகள் பற்றி தென்னாபிரிக்க முக்கியஸ்தர்களும் அமைச்சரும் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்டனர். அப்பொழுது தொன்னாபிரிக்காவின் உண்மைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் முயற்சிகள் பயனளிக்கதக்க விதத்தில் அமைந்திருந்த போதிலும், அவற்றில் குறைபாடுகளும் இருந்தாகத் தெரிவிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில், இலங்கை சுயமான உண்மையை கண்டறிவதற்கும் நல்லிணக்கத்திற்குமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வததோடு, அதற்கு ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து உரிய பாடங்களை கற்றுக் கொள்வது அவசியமென தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

    தென்னாபிரிக்காவில் மேலாதிக்கம் செலுத்திய வெள்ளைநிற பொலீஸாரும், ஆயுதப்படையினரும் கறுப்பினத்தவருடனான நல்லிணக்க முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவும், எதிராகவும் இருந்த அதேவேளையில், அத்தகையோர் மேற்கொள்ளும் இவ்வாறான முயற்சியில் கறுப்பினத்தவர் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்பட்டனர் எனவும் உயர்ஸ்தானிகர் கூறினார்.

    இலங்கையிலும், தென்னாபிரிக்காவிலும் நடைமுறையில் இருந்து வரும் ரோமானிய, டச் சட்டம் எத்துணை தூரம் பொருத்தப்பாடானது என்பதை பற்றிய ஆய்வு முயற்சிகள் இரு நாட்டுப் பல்கலைகழகங்களிலும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

    யுத்தம் முடிவடைந்து, அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தென்னாபிரிக்க முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் அமைச்சர் ஹக்கீம் அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வா, மேலதிகச் செயலாளர் குமார் ஏக்கரத்ன, அமைச்சரின் ஆலோசகர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

    டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச சமூகம் கூடுதலான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகித்தால் நல்லிணக்க முன்னேடுப்புகளை பாதிக்கச் செயயும்: ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top