ஏ.எச்.எம்.பூமுதீன்:
ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் யாரை
ஆதரிப்பது என்று தீர்மானிக்கின்றாரோ அந்த தீர்மானத்திற்கு நாம்
கட்டுப்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என வவுனியா மாவட்ட முஸ்லிம்
மக்கள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் மேற்படி உறுதி மொழியை
வழங்கியுள்ளனர்.
அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் எவரை ஆதரிப்பது
தொடர்பில் வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களின் கருத்தறியும் கூட்டம் வவுனியா
சூடுவெந்தபுளவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அ.இ.ம.கா
தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இடம்பெற்ற
இக்கருத்தறியும் கூட்டத்தில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட முஸ்லிம்
பிரதிநிதிகள், எமது மக்களின் விடிவுக்காக அயராது உழைத்துவரும் நீங்கள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் என்ன முடிவை எடுக்கின்றீர்களோ அதற்கு நாம்
கட்டுப்படுவோம் என்றனர்.
உயிரை
துச்சம் என மதித்து வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பான இருப்புக்காக
நீங்கள் ஆற்றும் பணிக்கு நன்றிக் கடனாக நாங்கள் மரணிக்கும் வரை உங்களுடனேயே
இருப்போம்.
வடமாகாண முஸ்லிம்களுக்காகவும்
நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்களுக்காகவும் தனது சுய மரியாதையை கூட விட்டுக்
கொடுத்து ஒவ்வொரு நிமிடங்களையும் சமுகத்திற்காக அர்ப்பணிக்கும் உங்களது
தலைமையின் கீழ் என்றும் நாம் அணி திரள்வோம்.
15
வருடகால உங்களின் பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முடிவையும் உங்களுக்கு வாக்களித்த மக்களை நன்றியுடன் நினைவு
கூர்ந்து அவர்களின் கருத்தறிந்து முடிவெடுக்கும் உங்களின் பண்பான
செயற்பாட்டுக்கு எமது நன்றிகள் என்றும் உரித்தாகும்.
வடக்கில்
இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து முதல் 10 வருடங்கள் நாம் அனுபவித்த
குடிசை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நீங்கள்.
வடக்கு
முஸ்லிம்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட போது அந்த அடிமைச்சங்கிலியை
உடைத்தெறிந்து வடக்கு முஸ்லிம்களின் கௌரவத்தை பாதுகாத்தவர் நீங்கள். வடக்கு
முஸ்லிம்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீங்கள் தனிப்பட்ட ரீதியிலும்
பொதுவாகவும் உதவி புரிந்து வருகின்றீர்கள் என்றெல்லாம் இங்கு கருத்து
தெரிவித்த மக்கள் மிக ஆக்ரோசமான முறையில் இவற்றை சுட்டிக்காட்டினர்.
இறுதியில்
ஒன்று திரண்டிருந்த வவுனியா முஸ்லிம்கள் அனைவரும் எழுந்து நின்று நாரே
தக்பீர் கோசம் எழுப்பி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நீங்கள் எடுக்கும்
முடிவுக்கு நாம் ஒன்று பட்டு ஒத்துழைப்போம் என பலத்த சத்தத்துடன்
அமைச்சருக்கு எத்திவைத்தனர்.
இதனை
அடுத்து மேடையிலிருந்து இறங்கமுற்பட்ட அமைச்சரை சூழ்ந்து கொண்ட வவுனியா
மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் தமது தோளில் அமைச்சரை சுமந்து கூட்ட
மண்டபத்திலிருந்து சூடுவெந்தபுளவு மகாவித்தியாலய முன்றல் வரை ஊர்வலமாக நாரே
தக்பீர் கோசத்துடன் அழைத்துச் சென்றனர்
பாடசாலைக்கு
அருகில் நின்று கொண்டு கூட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்த தாய்மார்கள்
ஓடோடி வந்து அமைச்சரை இன்முகத்துடன் சூழ்ந்து உரையாடிதுடன் மட்டுமன்றி இந்த
தாய்மாரின் பிரார்த்தனைகளும் நல்லாசிகளும் என்றும் உமக்கு இருக்கும் மகனே
என்றும் வாழ்த்தி வழியனுப்பினர்



0 comments:
Post a Comment