யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன் புலவு -
வள்ளக் குளம் பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி,
கிளைமோர் குண்டுகள் மற்றும் வெடி பொருட்களின் இறுதி இலக்கு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவாக இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு
சந்தேகிக்கிறது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், உளவுப் பிரிவின் தகவல்கள்
உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே பாதுகாப்பு தரப்பினர் இந்த
சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவ்வாறு
ஜனாதிபதி இலக்கு வைக்கப்பட்டிருப்பின் அதன் பின்னணியில்
உள்ளவர்கள் தொடர்பில் வெளிப்படுத்திக் கொள்ளவும் பயங்கரவாத
புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
பிரபுக்கள் பாதுகாப்பு மற்றும் விஷேட நிலைமைகள் தொடர்பிலான சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பதில் பொலிஸ் மா அதிபருமான
எஸ்.எம்.விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள்
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப்
பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி
செனவிரத்னவின் நேரடி கட்டுப்பாட்டில் பயங்கரவாத புலனாய்வுப்
பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.
கே.என்.டி. சில்வாவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் படி இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய
எட்வர்ட் ஜூலியஸ் எனும் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் புலிகள்
இயக்க உறுப்பினரை சாவகச்சேரி பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்றுள்ள
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர்கள் அவரை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை வரை செய்யப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த
தற்கொலை அங்கி, கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடி பொருட்கள்
குறித்த வீட்டிலிருந்து பிறிதொரு இடத்துக்கு கொண்டு செல்லவே தயார்
நிலையில் பொதி செய்து வைக்கப்பட்டிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதிக்குரிய
சிங்கள பத்திரிகை ஒன்றினால் அவை மறைத்து பொதி செய்து தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.
சிங்களப் பத்திரிகை பொதி செய்ய பயன்படுத்தப்பட்டமையில் ஏதேனும்
சாதக நிலமை ஒன்று இருக்கலாம் என சந்தேகிக்கும் பயங்கரவாத
புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம்
செலுத்தியுள்ளனர்.
இதனிடையே கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் வைத்து கைது
செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்
வழங்கியுள்ள வாக்குமூலத்தில், யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்ட
நிலையில் முல்லைத்தீவு பகுதியில் இருக்கும் வாகனங்களில் இருந்தே
குறித்த வெடி பொருட்களையும் தற்கொலை அங்கிகளையும்
பெற்றுக்கொண்டதாகவும், வெடி பொருட்கள் தனது தொழிலான மீன்பிடித்
தொழிலை முன்னெடுக்க உதவும் என்பதாலேயே எடுத்து வந்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
எனினும் விசாரணையாளர்கள் அவரது அந்த வாக்குமூலத்தை
நிராகரிக்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்களில் அத்தகைய வெடி
பொருட்கள், தற்கொலை அங்கி மறைத்து வைக்கப்பட வாய்ப்புக்கள் குறைவு என
சுட்டிக்காட்டும் விசாரணையாளர்கள், சந்தேக நபர் தொழிலுக்காக
கொண்டு வந்திருப்பின் கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், 100
தோட்டாக்கள் என்பன எதற்காக கொண்டுவரப்பட்டன என்பது குறித்து
ஆராயப்படல் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே அவரது அந்த வாக்குமூலத்தை பயங்கரவாத புலனாய்வாளர்கள் நிராகரிக்கின்றனர்.
இதனிடையே கைதாகியுள்ள சந்தேக நபர் தொடர்பில் வேறாக செய்யப்பட்ட
விசாரணைகளிலும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதன்படி சந்தேக நபர் தனது 13 ஆவது வயதிலேயே விடுதலைப் புலிகளுடன்
இணைந்தவர் என தெரிவிக்கும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ்
அதிகாரி, இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த
காலப்பகுதியில் வன்னியில் இருந்து புலிகளின் பிடியையும் மீறி சந்தேக
நபர் வவுனியா வந்து கூலி வேலைகளை செய்து சிவில் சமூகத்துடனான தனது
வாழ்வை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் உறுதியானதாக
குறிப்பிட்டார்.
குறித்த சந்தேக நபர் ஒரு மீன் வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக
லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், மீன் வர்த்தக
நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறான
நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை
செய்ததாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந் நிலையிலேயே அவரது மனைவி பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது
கணவர் வீட்டில் கஞ்சா பொதிகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்தே அவர் பொலிஸாருக்கு
இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கித் சிறி
ஜயலத் தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பிராந்திய துஷ்பிரயோக
தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை சுற்றிவளைப்புக்கு
அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில், குறித்த நபர்
வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான
நடவடிக்கையை மேற்கொண்டனர். சந்தேகநபர், இரவு 9 மணியாகியும்
வீட்டுக்கு வரவில்லை.
இதனையடுத்தே, அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து,
பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட
வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர்.
அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை
மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை நடத்திய
பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை
மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அவருடைய மனைவி, அவ்விடத்திலேயே மயங்கி
விழுந்துவிட்டார். இதனையடுத்து சந்தேகநபர் தொடர்பிலான விவரம்
அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. மயங்கி
விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும்
அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி
அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்று வருவதாக
தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு
மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, அக்கராயன் குளம் பகுதியில் தனது டிமோ
பட்டா ரக லொறியில் தென் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த போது
சந்தேகநபர், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் கைது
செய்யப்பட்டார்.
சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும்,
அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும்,
அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும்
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி
மறவன் புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார்.
அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை
ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துகொண்டு,
வீட்டைவிட்டு வெளியேறிவிடுவதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின்
உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும்
ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது
செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலியஸ் (வயது 30)
என்றும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்
சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு
அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரின் தொலைபேசி இலக்கம் பூரண
வலையமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவரது
தொலைபேசிக்கு உள் வந்த, வெளிச் சென்ற அழைப்புக்கள், அவரது வெளிநாட்டு
தொடர்புகள் குறித்து ஆராயவே இது குறித்த ஆய்வுகளை ஆரம்பித்ததாக
பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்
வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, ஆயுத கட்டளைச்
சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தொடர்பில்
தற்சமயம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் கவனம்
திரும்பியுள்ளதாகவும், குறித்த நபருடனான சந்தேக நபரின்
தொடர்புகளை உறுதிப்படுத்தும் சான்றுகளை தற்சமயம்
புலனாய்வாளர்கள் சேகரித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
இதனிடையே ' ஜனாதிபதியைக் கொல்ல இராணுவ முகாம் ஒன்றில் சதித்திட்டம்
தீட்டப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஊடகவியலாளர்
சந்திப்பை நடத்தி சில நபர்களின் பெயர் விபரங்களையும்
வெளிப்படுத்தியிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட
அமைப்பளர் துவாரகேஷ்வரனிடம் வாக்குமூலம் பெறுவது குறித்தும்
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அவரது குறித்த கருத்துக்கள் தொடர்பில் ஏற்கனவே வட மாகாண சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், தேசிய
உளவுப் பிரிவினர் உள்ளிட்டோர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்த
நிலையிலேயே, சில விடயங்களை மேலும் உறுதிப்படுத்த மீண்டுமொருமுறை
அவரை அழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்வது
குறித்து புலனாய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த ஆயுதங்கள், தற்கொலை அங்கி ஆகியன வெள்ளவத்தை
பகுதிக்கு கொண்டுவர தயார் நிலையில் இருந்ததாக முன்னாள் அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த
கருத்து தொடர்பிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விளக்கம்
கோருவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் நேற்று மாலை வரை பயங்கரவாத புலனாய்வாளர்களால்
முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளில், மீட்கப்பட்ட தற்கொலை அங்கி
உள்ளிட்டவை எங்கு கொண்டு செல்லப்பட, யாரை இலக்கு வைத்து மறைத்து
வைக்கப்பட்டது என்பதற்கான உறுதியான தகவல்கள்
வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
சம்பவம் குறித்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, சாவகச்சேரி வீட்டிலிருந்து தற்கொலை
அங்கியொன்றும், நான்கு கிளைமோர் ரகத்தைச் சேர்ந்த குண்டுகள், இரு கிளைமோர்
ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பெட்டரிகள், 12 கிலோ கிராம் நிறைக் கொண்ட
அதி சக்தி வாய்ந்த ரி.என்.ரி. வெடிபொருட்கள், 9 மில்லிமீற்றர் ரக
துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் 100 (இரு பெக்கட்டுக்கள்)
ஆகியன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இவை நேற்று நீதிவான் முன்னிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்
முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தற்சமயம் அவை புலனாய்வாளர்களின்
கட்டுப்பாட்டில் உள்ளன.
குறித்த ஆயுதங்கள், வெடி்பொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியன நல்ல
நிலையிலேயே உள்ளதாக வட பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment