நாட்டில் "பிரம்மன்" ஜனாதிபதியானாலும் சுற்றாடலை அழிவுக்கு கொண்டு செல்லும்
எந்த ஒரு முடிவுக்கும் இடமளிக்கப் போவதில்லை என பாஹிங்கல ஆனந்த தேரர்
தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை பதவியில் அமர்த்த தாமும் முன்னோடியாக
செயற்பட்டதாக தெரிவித்த தேரர் அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவோ
எதிர்க்கவோ தயங்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மணல் அகழ்வு மாற்று கொண்டு செல்லுதல் தொடர்பாக இதுவரையில் நடைமுறையில்
இருந்த அனுமதி பத்திரத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
நேற்று அறிவித்திருந்தது.
அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த தீர்மானத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் பாஹிங்கல ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த தேரர்;
அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது சூழலை பாதுகாப்பதற்கு அல்ல சுற்றாடலை
சீர்குலைப்பதற்காகும். உதாரணத்திற்கு அண்மையில் வலப்பனை பிரதேசத்தில்
இடம்பெற்ற மண்சரிவை எடுத்துக்கொள்வோம். அதற்கு முழு காரணம் இந்த நாட்டின்
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளுமே ஆவார்கள்.
அந்த அப்பாவி குடும்பத்தை சார்ந்தவர்கள் இறக்கவில்லை. கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கொலையாளிகள்.
அந்த வீடு இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கற்குழி
காணப்படுகிறது. கற்களை அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும்
உடைக்கிறார்கள். அனர்த்தத்தை அரசாங்கமே ஏற்படுத்தி அதன் பின்னர் அந்த
இடத்தில் மண்சரிவு அனர்த்தம் என்று அரசாங்கமே பதாதைகளை மாட்டுகின்றார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு, வானிலை மாற்றம், வறட்சி போன்ற அனர்த்தங்களை அரசாங்கமே காரணம்.
நான் இவ்வாறு கூறுவது எதிர்க்கட்சியின் ஆதரவுக்காக அல்ல. யார் செய்தாலும்
பிழை பிழைதான். நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும்போது அரசாங்கம்
இந்த தீர்வினை எடுத்துள்ளமையை கண்டிக்க வேண்டும்.
மக்கள் புதிய அரசாங்கத்திற்கு நாட்டை ஒப்படைத்தது எதற்கு? இவ்வாறு நாட்டை இல்லாமல் ஒழிக்கவா?,என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

0 comments:
Post a Comment