( எம்.எப்.எம்.பஸீர்)முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகள் நாளை (08.07.2021) மீளவும் இடம்பெறவுள்ளன.
உயர் நீதிமன்றின் 404 ஆம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்குகள் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவை, இணையம் ஊடாக மேற்பார்வை செய்ய தமக்கு சந்தர்ப்பம், வசதிகளைச் செய்து தருமாறு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் உயர் நீதிமன்ற பதிவாளரை எழுத்துமூலம் கோரியுள்ளது.
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்டின் சுங்கொங் கையெழுத்திட்டு கடந்த 6 ஆம் திகதி ஜெனீவாவிலிருந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து பரிஸ்டர் மார்க் ட்ரொவெல் எனும் அதிகாரிக்கு வழக்கை அவதானிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அந்த வசதிகளைச் செய்து கொடுக்குமாறே குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment