• Latest News

    March 12, 2024

    சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையைக் கோரவில்லை. - பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா

     
    சர்வதேச கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தையையே அன்றி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையைக் கோரவில்லை. கடன் உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, எதிர்தரப்பினரது இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே தான் வலியுறுத்தியதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

    சர்வதேச நாணய நிதியத்துடன் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    நான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையைக் கோரவில்லை. சர்வதேச கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தையையே கோரினேன். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்படும் இணக்கப்பாட்டினை அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு விடயம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியாக அமையும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மீண்டும் நாடு வங்குரோத்தடைவதோடு, கடன்களை மீளச் செலுத்த முடியாமலும் போகும்.

    2022 ஜூன் மாதத்தில் எதிர்கொண்டதைப் போன்று மோசமான நிலைமையை மீண்டும் எதிர்கொள்வதற்கான எவ்வித தேவையும் இல்லை. எனவே தான் கடன் உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, எதிர் தரப்பினரது இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு கூறினேன். எதிர்க்கட்சிகளை பொறுப்பு கூற வேண்டிய ஒரு நிலைமைக்கு கொண்டு வருமாறே கூறுகின்றோம்.

    நான் இதனையே வலியுறுத்தினேனே அன்றி, சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வித பேச்சுவார்த்தைகளைக் கோரவில்லை. அது மாத்திரமின்றி நாணய நிதியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தற்போது அவர்களுடன் எட்டப்பட்டு இணக்கப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வோம் என்பதையும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளோம்.

    எப்படியாவது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் நிலைப்பாட்டில் நாம் இல்லை. மாறாக எதற்காக ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதையே நாம் குறிப்பிடுகின்றோம் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையைக் கோரவில்லை. - பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top