டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில், நான்கு பேர் குற்றவாளி என
கோர்ட்டு தீர்ப்பு. தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என்று
கோர்ட்டு அறிவிப்பு.
டெல்லியில், 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
16–ந்தேதி ஓடும் பஸ்சில் காமக் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
படுகாயங்களுடன் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த மாணவி, தீவிர
சிகிச்சை அளித்தும் பயன் இன்றி, சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக
இறந்தார். மாணவியுடன் சென்ற நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். தலைநகரில்
நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியது. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கற்பழிப்பு கும்பலை
சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால், இளங்குற்றவாளிகள்
கோர்ட்டில் அவன் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை
முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இளங்குற்றவாளிகள் சட்டப்பிரிவின்படி,
அதிக பட்ச தண்டனையான 3 ஆண்டு சிறை தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது. மற்ற 5
குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் என்பவன், கடந்த மார்ச் மாதம் 11–ந்தேதி
அன்று டெல்லி திகார் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான்.
இதனால் அவன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற 4 குற்றவாளிகளான
வினய்சர்மா, அக்சய் தாக்கூர், பவான் குப்தா மற்றும் முகேஷ் ஆகிய 4 பேர்
மீதான வழக்கு விசாரணை டெல்லி விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 117
நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில், போலீஸ் தரப்பில் 85 சாட்சிகள்
விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த மூன்றாம் தேதியுடன் விசாரணை
முடிவடைந்தது. வருகிற 10–ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று, நீதிபதி யோகேஷ்
கன்னா அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
குற்றவாளிகள் நான்கு பேர்களும் கோர்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டு இருந்தது. விசாரணையின் போது
கோர்ட்டு வினய்சர்மா, அக்சய் தாக்கூர், பவான் குப்தா மற்றும் முகேஷ் ஆகிய
4 பேர்களும் குற்றவாளிகள் என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என்று
கோர்ட் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment