தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனினும்
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே எம்முடன்
இணைந்து செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்
பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்
தெரிவித்தார்.
மேலும் தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளனர். ஆயினும் ஹக்கீம்
காலம்கனிந்து வரும்வரையில் காத்திருப்பது அர்த்தமற்றது எனவும் அவர்
தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக வினவியபோதே
அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசாங்கத்திற்குள் பல அழுத்தங்களை
சந்தித்து வருகின்றது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்தும்
செயற்படுவதா அல்லது வெளியேறுவதா என்பது தொடர்பில் நிலையான கொள்கை
இல்லாதவர்களாகவே செயற்படுகின்றனர். கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்து
வெளியேறப் போவதில்லை என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எனினும்
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் வருவதாக
குறிப்பிடுகின்றார்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து கூட்டமைப்பினை ஆதரிக்கவோ அல்லது எம்முடன் இணைந்து
செயற்படவோ முடியாது. அரசாங்கத்திற்கும், எமக்கும் இடையில் பெரியதொரு
இடைவெளி உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் எம்முடன் இணைய விரும்பினால் சிறுபான்மை
மக்களின் பக்கம் நின்று குரல் கொடுக்க முயற்சிக்குமாயின் உடனடியாக
அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும். அரசாங்கத்தை உதறிவிட்டு எம்முடன்
இணைந்து வடக்கு கிழக்கினை பலப்படுத்த தயாரெனில் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸை ஆதரிக்கத் தயாராக உள்ளோம். இன்று சிறுபான்மை சமூகமாக வாழும்
தமிழ், முஸ்லிம் மக்களின் தேவையும் இதுவாகவே உள்ளது.
அதேபோல் கடந்த கால வரலாறுகளை அமைச்சர் ஹக்கீம் மறந்துவிடக்கூடாது. அன்று
நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து செயற்பட விருப்பம்
தெரிவித்தபோதும், அவர்கள் எம்மை நிராகரித்தனர். அதேபோல் நல்லாட்சி உரிமைகள்
தொடர்பில் பேசிக்கொண்டு அவற்றினை எதிர்த்து வாக்களித்தனர். 18ஆவது
திருத்தச்சட்டம் தொடர்பில் நாம் எதிர்ப்புக்குரல் எழுப்பிய போதிலும்
அரசாங்கத்துடன் இணைந்து அதை ஆதரித்தனர். இவை அனைத்தின் விளைவுகளே இன்று
அனைவரையும் சிக்கல்களில் தள்ளியுள்ளது.
மேலும் தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களையும்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் ஆதரிக்கத் தயாராகவே உள்ளோம். வடக்கினை
போன்று கிழக்கினையும் பாதுகாக்கும் சக்திகளாக நாம் அனைவரும் உருவாக
வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்குள் இருந்து
கொண்டு ஒரு போதும் தீர்க்க முடியாது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
புரிந்து கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாயின் அதே சிறந்த முடிவாகும்.
அதைவிடுத்து காலம் கனியும் வரையில் காத்திருந்து முடிவெடுப்பதும்
சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் பொறுமை காப்பதும் அர்த்தமற்ற விடயமாகும்.
இதனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்
தெரிவித்தார்.

0 comments:
Post a Comment