• Latest News

    November 23, 2014

    48 மணி நேரத்தில் மஹிந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: மைத்திரிபால சிறிசேன

    அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவித்து 48 மணிநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

    கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து வழிப்பாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    கடந்த 48 மணிநேரத்தில் நாட்டிற்குள் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிரமமான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளது.

    இதன் காரணமாக ஜனாதிபதி நெருக்கடியை சந்தித்து வருவதால், எதிர்காலத்தில் எமக்கு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

    இதனால், பழிவாங்கும் அரசியலில் இருந்து ஒதுங்கி பொறுமையாவும் சிந்தித்தும், கலவரமின்றியும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கின்றோம். மக்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை நாளைய தினம் தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மஹாபோதி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் மாநாயக்க தேரர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிகழ்வில் கரு ஜயசூரிய, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    மைத்திரிபால சிறிசேன முக்கிய பௌத்த பிக்குவின் ஆதரவை பெற்றுக்கொண்டார்

    இலங்கையின் எதிர்க்கட்சி ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் முக்கிய பௌத்த பிக்குவின் ஆதரவை பெற்றுக்கொண்டார்.

    நாகவிஹாரையின் பிரதமக்குருவும் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்தவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் ஆசிர்வாத்தையே மைத்திரிபால சிறிசேன இன்று பெற்றுக்கொண்டார்.

    நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்தவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முன்வந்தமைக்காக மைத்திரிபால சிறிசேனவை தேரர் பாராட்டினார்.

    மஹிந்த ராஜபக்ஷ 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதில் தோல்விக்கண்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

    இந்தநிலையில் வடமத்திய மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள பௌத்த முக்கிய தேரர்களை தாம் நாளை திங்கட்கிழமையன்று சந்தித்து ஆசிப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
    TW

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 48 மணி நேரத்தில் மஹிந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: மைத்திரிபால சிறிசேன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top