பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று பயங்கரவாதமும், இனவாதமும் தோற்கடிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சில பேரினவாதக் குழுக்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்படுகின்றனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமை காக்க வேண்டுகின்றேன்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் இன,மத வேறுபாடின்றி உதவிக்கரங்கள் நீண்டப்பட்டன. இதன் மூலம் நாட்டு மக்களிடையே இனவாதம், மத வாதம் இல்லை என்பதை இந்த இனவாதக் குழுக்களுக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் எமது நாட்டில் மதக் கடமைகளையும், போதனைகளையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இப்புனித நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் குறிப்பிட்டுள்ளார்.
06.07.2016

0 comments:
Post a Comment