• Latest News

    April 09, 2018

    மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையினது செயற்பாடுகள் திருப்திகரமாகயில்லை - இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்

    நுவரெலியா நிருபர்
    பாதை அபிவிருத்தி அதிகார சபையினது மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையினதும் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.பல பாதைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகியும் இதுவரையில் அந்த பாதைகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது.மக்கள் அடிக்கல் நாட்டிய எங்களிடமே கேள்வி கேட்கின்றார்கள்.ஏனைய மாவட்டங்களில் அனைத்து பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது.இதற்கு காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

    அம்பேகமுவ கோரளை  பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (09.04.2018) அம்பேகமுவ பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு இணைத்தலைவர்களான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ்,சோ.ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகர மேற்கொண்டிருந்தார்.

    தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
    நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற பாதை அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மந்தகதியிலேயே செயற்படுகின்றார்கள்.ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பது எமக்கு புரியவில்லை.இது நுவரெலியாவிற்கு மாத்திரமே இந்த நிலை.அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்து 50 வீதம் 60 வீதம் வேலை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள்.ஆனால் 10 வீதமான வேலைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை.

    நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற பாதைகள் அபிவிருத்தி செய்யப்படாமையின் காரணமாக இங்குள்ள மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.பாதை சரியாக இல்லாத காரணத்தால் அநேகமான தோட்டங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாமல் இருக்கின்றது.இதன் காரணமாக எங்களுடைய மக்கள் தங்களுடைய பல தேவைகளை பூ10ர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ளது.எனவே இந்த அதிகாரிகள் தொடர்பாக நான் வெகு விரைவில் இது தொடர்பான அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அதிகாரி
    அம்பேகமுவ பிரதேசத்தில் 74 வீதமான நீர் பாவனைக்கு உதவாத வகையிலேயே இருக்கின்றது.அதற்கு காரணம் அந்த நீரில் களிவுகள் கலந்திருக்கின்றது.அதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய ஒரு பிரச்சினைக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் தற்பொழுது நல்லதன்னி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் அநேகமானவை இதுவரையில் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றது.தூர இடங்களுக்கு செல்கின்ற பேருந்துகள் நிறுத்தப்படுகின்ற உணவகங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.அநேகமான உணவகங்கள் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.ஒரு சில உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன்
    2017 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி ஹட்டன் வலயம் 71.53 வீதமாக அதிகரித்துள்ளது.2016 ஆம் அண்டைவிட 11.5 வீதமான பெறுபேறுகள் அதிகரித்துள்ளன.தேசிய மட்டத்தில் நாங்கள் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.இவ்வருடம் நாங்கள் 100 வீதமான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.இலங்கையின் 99 வலயத்தில் 46 இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையினது செயற்பாடுகள் திருப்திகரமாகயில்லை - இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top