• Latest News

    September 14, 2018

    வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்

    அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள  வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கி தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம்,  கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் மோசமாக  பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குவதாகவும், இதுவரையும் இந்த வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாததனால்,  மக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும், ஒழுங்கான வசதிகள் இல்லாததனால் தூர இடங்களுக்கு மருத்துவத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கியம் நிலவுவதாகவும்;, பல சந்தர்ப்பங்களில் இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற நோயாளர்கள் இறப்பினை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும், அமைச்சர் ரிஷாட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் பீடித்த டெங்கு நோய் கிண்ணியா மக்களை பெரிதும் பாதித்ததுடன் அந்த பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வைத்தியசாலை போதிய மருத்துவ வசதிகள் இன்மையினால், டெங்கு நோயாளர்கள் உரிய சிகிச்சைகள் கிடைக்காது இறந்தமையையும், மோசமாக பாதிக்கப்பட்டமையையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட் புத்தளம் மாவட்டத்திலும், இதே நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 

    புத்தளம் மாவட்டத்தில்  அண்மைக் காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்ட  சூழலியல் பாதிப்புக்கள்  இந்த மக்களை அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அமைச்சர் தனது கடிதத்தில்  மேலும் சுட்டிக்காட்டினார்.  

    கடந்தவருடம் புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் ராஜீத சேனாரட்னவை தாம் அழைத்துச் சென்று வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறை, ஏனைய குறைபாடுகள் பற்றி நேரில் காண்பித்ததையும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.   


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top