நாட்டை கட்டியெழுப்பக் கூடிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வலுவான
மற்றும் பலமிக்க அரசியல் கூட்டணியை உருவாக்கி, அந்த கூட்டணியின் சார்பில்
வேட்பாளரை நிறுத்தி, நாட்டில் புதிய அரசியல் புரட்சியை ஏற்படுத்த போவதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் கொள்கைகளை
வெளியிடுதல் மற்றும் வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்ய
எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டணியில் இணையும் கட்சிகளின் அடையாளங்களை
பாதுகாத்து கூட்டணியாக கைகோர்க்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்கும்புர வீதியின் புனரமைப்பு பணிகளை நேற்று ஆரம்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம்
கிராமங்களுக்கு எதனையும் செய்யவில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அனைத்து கிராமங்களுக்கும் ஒரு
வருடத்தில் குறைந்தது இரண்டு திட்டங்களையாவது நாங்கள்
வழங்கியிருக்கின்றோம். இப்படியான அபிவிருத்தியை நாட்டில் மேற்கொள்ள தேவையான
பணத்தை சிரமான முறையில் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.
2009 ஆம் ஆண்டு
போர் முடிவுக்கு வந்தது. 2010 ஆம் ஆண்டில் இருந்து நாட்டை அபிவிருத்தி
செய்வதற்கு பதிலாக பெருந்தொகை கடனை பெற்று அரசாங்கத்தை கொண்டு நடத்த
முடியாத நிலைமைக்கு சென்றனர். இதனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர்
ஜனாதிபதி தேர்தலை கடந்த ஆட்சியாளர்கள் நடத்தினர்.
இரண்டு வருடங்கள்
எஞ்சியிருக்கும் நிலையில், விருப்பமின்றியேனும் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலை
நடத்த நேரிட்டது. நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது, கடனை செலுத்த நாட்டின்
பணம் இருக்கவில்லை.
படிப்படியாக நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை
ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்தோம். கடனை திருப்பி செலுத்த முடியும் என்ற
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடனை பெற்றாவது கடனை திருப்பி செலுத்த முடியும்
என்ற நிலைமைக்கு நாம் வந்துள்ளோம் எனவும் ரணில் விக்ரமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment