• Latest News

    November 18, 2019

    உலகமே வியக்கும் ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக மாற்றமடையும் : ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

    இலங்கை ஜனநாயக குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18)  அநுராதபுர புனித ருவான்வெலிசாய மண்டபத்தில் ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

    கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னராக ஸ்ரீ மஹா போதியிலும் ருவான்வெலிசாயவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசிகளை பெற்றுக்கொண்டார். சத்திய பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பொதுமக்களுக்கு புதிய ஜனாதிபதி  உரை யாற்றினார்.

    இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அவர்களுக்கும், பிரதம நீதி அரசர், உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மற்றும் இலங்கை வாழ் மக்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த புனித பூமி மாசயவில் இருந்து உரையாற்றுவதற்று எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை உன்னதமான பாக்கியமாக கருதுகின்றேன்.

    இலங்கையின் முக்கிய மன்னரான துட்டகைமுனு மன்னரின் சிலைக்கு அருகாமையில் இருந்து இந்த உரையை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் எனக்கு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணையே காரணமாகும். நான் இன்று உங்களை சந்திப்பது இந்த நாட்டை எப்பொழுதும் நேசிக்கும் ஜனாதிபதி, முப்படைகளின் தலைவர், உங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும்   பாதுகாப்பை உறுது செய்யும் ரீதியில் உரையாற்றுகின்றேன்.

    எனது இந்த தேர்தலின் வெற்றிக்கு அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பௌத்த மத மஹா சங்கத்தினரது நல்லாசியே காரணமாகும். சிங்கள மக்களின் ஆதரவுடன் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ்,  முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு. ஆனால் அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.

    தனது இந்த வெற்றிக்கு பெரும் சக்தியாக விளங்கியவர் இந்த நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக செயற்பட்டவரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆவார் என்றும் அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் என்றும் கூறினார்.

    புதிய ஜனாதிபதி என்ற ரீதியில் நான் மீண்டும் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவெனில் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக முன்னோக்கி பயணிப்பதற்கு தேசிய ரீதியில் அனைவரும் என்னுடன் ஒன்றிணையுமாறு  கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜனாதிபதி தேர்தலின் போது, நான் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களிலும் எனது பதவி காலத்தில் முடிந்த வரையில் நிறைவேற்றுவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதாகும். எனது அரசாங்கத்தில் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை கொள்கையை முன்னெடுப்பதே எனது நோக்கம். அதேவேளை நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் முக்கியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் நாம் சர்வதேச நாடுகளுடன் நடுநிலைக் கொள்கையை கையாள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே எமக்குள்ள தற்போதைய தேவையாகும். இதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பெருமையாக இங்கு வாழக்கூடிய ஒரு சூழலைத்தான் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இவற்றை நான் நிச்சயமாக எமது காலத்தில் மேற்கொள்வேன். தீவிரவாதம் அடிப்படைவாதம், போதைப்பொருள், வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக உருவாக்குவோம்.
    வினைத்திறன் மிக்க அரசாங்க நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வழங்கி நான் செயற்படுவேன். இதில் ஆற்றல் மிக்க தகுதியானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தில் ஊழலுக்கு இடமில்லை. அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் புதிய ஜனாதிபதி உறுதிபட தெரிவித்தார். எனது வெற்றிக்காக வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தியதற்காக நான் நன்றி கூறுகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

     உலகமே வியக்கும் ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக மாற்றமடையும். சட்டம்,நீதி இலங்கையில் நிலைநாட்டப்படும்.  21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனைத்து துறைகளும் நவீன மயப்படுத்தப்படும். எமக்கு முன்னாள் பாரிய சவால்கள் இன்று காணப்படுகின்றன. ஆனால் அவை முறியடிக்க முடியாத சவால்கள் அல்ல. ஒழுக்க நெறிமுறைகளுடனான நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகமே வியக்கும் ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக மாற்றமடையும் : ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top