மிகப் பெரிய ராமர் கோயில் ஒன்று, நான்கு மாதங்களுக்குள் அயோத்தியில் கட்டி
முடிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஜபல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு பேசினார்.
"காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல் ராமர் கோயில் கட்டக்கூடாது என்று
கூறியுள்ளார். சிபிலை சகோதரர் என்று குறிப்பிட்ட அமித் ஷா 'நீங்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவியுங்கள்'. நான்கு மாதங்களில் மிகப்பெரிய
ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்களையும் தாக்கி பேசினார். அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தியின் சத்தியம் செய்ததாகவும்,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து வரும் ஒவ்வொரு
முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கும் தன்னுடைய அரசு குடியுரிமை வழங்கும் என்று
அமித் ஷா குறிப்பிட்டார்.
"ஜூலை 1947ல் பேசிய மகாத்மா காந்தி, பாகிஸ்தானில் இருந்து திருப்பி
அனுப்பப்படும் இந்து சகோதரர்களை இந்தியா என்னாளும் வரவேற்கும் என்பதை
மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியதாக அமித் ஷா தெரிவித்தார்.
"ராகுல் அவர்களே, நீங்கள் மகாத்மா காந்தி கூறியதை கேட்க மாட்டீர்களா?
ஏனெனில் நீங்கள் காந்தியை பின்பற்றுவதை என்றோ நிறுத்தி வீட்டீர்கள். உங்கள்
தாத்தா நேருவும் பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை
வழங்கப்படும் என்று கூறினார். அவரையும் நீங்கள் கேட்க மாட்டீர்களா?"
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய மூன்று நாடுகளில்
இருந்தும் வரும் பெரும்பாலான மக்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும்
அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் இந்த சட்டத்தை எதிர்க்கும் ராகுல் காந்தியோ, அல்லது மமதா பானர்ஜியோ,
இந்திய குடிமக்களிடம் இருந்து குடியுரிமையை பறிக்கும் ஒரே ஒரு விதியை
இதில் முடிந்தால் காண்பியுங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
ஜே.என்.யு தாக்குதல் குறித்து அமித் ஷா
பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ஜே.என்.யு தாக்குதல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
"ஜே.என்.யு மாணவர்கள் சிலர் இந்தயாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் தானே. இந்தயாவுக்கு எதிராக கோஷங்கள்
எழுப்பும் நபர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்று அமித் ஷா கூறினார்.

0 comments:
Post a Comment