எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்திற்கான முஸ்லிம்
பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக பெரும்பான்மை கட்சிகள் மூலம்
பயணிப்பது ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் மு.கா மரச்சின்னத்தில் களமிறங்க
முடிவெடுத்துள்ளது.
நேற்று இரவு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட
கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில்
கடந்த காலங்களில் இழந்து வந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை
வென்றெடுப்பதற்கு என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று கலந்து
கொண்டிருந்த சகலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இதன் படி
பெரும்பான்மை கட்சிகள் மூலம் பயணிப்பதை காட்டிலும் மரச்சின்னத்தில்
களமிறங்குவது வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்று சகல தரப்புகளும் தலைவரை
வேண்டிக்கொண்டன.
அதேவேளை பிற கட்சிகளின் சிறுபான்மை முக்கியஸ்தர்களையும் மரச்சின்னத்தில்
வேட்பாளர்களாக களமிறக்கி செயற்படுவதன் மூலம் வெற்றி வாய்ப்பை மேலும்
பன்மடங்காக்க முடியும் என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதற்கான பூரண அனுமதிகளை கட்சியின் தலைவர் வழங்கினார்.மேலும் ஊரின் சகல
தரப்புகள் மற்றும் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊரின் தலைமைகளுடனும் கூட்டாக
செயற்பட்டு இழந்து வந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க
பணியாற்றும்படி கட்சி முக்கியஸ்தர் களை கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் 'முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் மரச்சின்னத்தில்
போட்டியிடும் அதேவேளை சகல கட்சிகள், மற்றும் சகல தரப்பினர்களையும்
உள்வாங்கி பயணிக்கும்.' என்று இறுதி முடிவு எட்டப்பட்ட நிலையில் கூட்டம்
நிறைவுபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்
கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உடன் புத்தளம்
மாவட்டத்தின் கட்சி முக்கியஸ்தர்கள் சகலரும் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
#SLMCputtalamJowfar Marikkar

0 comments:
Post a Comment