மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம்
நிம்மதியாக வாழ்ந்தது போன்று இனிவரும் காலமும் நிம்மதியாக வாழ சிந்தித்து
செயற்பட வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்
அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியினால் கல்குடா பிரதேசத்திற்கான பொதுத்
தேர்தல் தொடர்பாக கட்சி பிரதிநிதிகளுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல்
வாழைச்சேனையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற போது
கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எமது மக்கள்
நிம்மதியாக வாழ்ந்தார்கள், பல அபிவிருத்திகளை பார்த்தார்கள். ஆனால் தற்போது
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்காதமை
பெரும் ஏமாற்றத்தினை தந்துள்ளனர் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர்
நினைக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தது
போன்று இனிவரும் காலமும் நிம்மதியாக வாழ சிந்தித்து செயற்பட வேண்டும்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை மற்றும் கிரான் பிரதேச சபை என்பவற்றை ஐக்கிய
சமாதான கூட்டமைப்பு கட்சியினால் மாத்திரமே உங்களுக்கு பெற்றுக் கொடுக்க
முடியும். அத்தோடு பிரதேச சபையால் இழக்கப்பட்ட காணிகளை பெற்றுத் தருவதாக
பலர் அறிக்கைகள் விட்டாலும் நாங்கள் அறிக்கைகள் விடாமல் தங்களது செயலின்
மூலம் செய்து கொடுப்போம்.
கடந்த காலத்தில் அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளை அமீர் அலி,
ஹிஸ்புல்லா, அதாவுல்லாஹ் யாராக இருந்தாலும் மஹிந்த கால அரசாங்கத்தின் மூலமே
பாரிய அபிவிருத்திகளை செய்திருப்பார்கள். தங்களுக்கு அபிவிருத்தி செய்யக்
கூடிய பாராளுமன்ற உறுப்பினர் வேனுமா அல்லது ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர்
வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை உள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை வேண்டுமா ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர்
வேண்டுமா சிந்தித்து செயற்படுங்கள். எங்களால் மாத்திரமே தங்களுக்கு
இனிவரும் காலங்களில் உதவிகளை செய்ய முடியும் என்றார்.
குகதர்ஷன்-
0 comments:
Post a Comment