தொல்பொருள் மற்றும் வரலாற்று இடங்களை, காழ்ப்புணர்ச்சி, தனிநபர்கள் மற்றும்
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதாக
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன
உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஹுது மகா விஹாராய மற்றும்
தீகவாபி தொல்பொருள் பிரதேசத்திற்கான நேற்றைய -14- விஜயத்தின்போது பெளத்த
குருமார்களையும் உள்ளுர்வாசிகளையும் சந்தித்தபோதே அவர் இவ்வாறு
உறுதியளித்தார்.
நாட்டின் பல தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்களின் பரவலான மற்றும்
முன்னோடியில்லாத ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அண்மைய காலத்தில் பிரதான விடயமாக
பேசப்பட்ட மற்றும் சமூக ஊடக செய்தி அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில்
இந்த விஜயம் அமைந்திருந்தது.
தேசிய பாரம்பரியத்திற்கான சேதங்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட
குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து
சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தேசிய பொக்கிஷங்களான தொல்பொருளியல் மற்றும் வரலாற்று இடங்கள் நாட்டின்
எதிர்கால தலைமுறையின் நலனுக்காக இன, மதம் என்பன கருத்தில் கொள்ளப்படாமல்
எந்த மதத்தை சார்ந்ததாக இருப்பினும் அவை பாதுகாக்கப்படும்.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சில தனிநபர்கள் மற்றும் குழுக்களால்
இவ்வாறான தளங்களை அழிப்பதிலும் ஆக்கிரமிப்பதிலும் அதிகரிப்பு
ஏற்பட்டுள்ளது.
சிலர் இவ்வகையான தளங்களை சேதப்படுத்துகிறார்கள் என்பதையும், சட்ட
அமலாக்கத்தின் முன்னிலையில் சில முக்கியமான மத தளங்களையும்
ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது எனவும்
அவர் கூறினார்.
இந்த விஜத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத், இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்
பியால் டி சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, கிழக்கு
மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணாண்டோ ஆகியோர் பாதுகாப்பு
செயலாளருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment