• Latest News

    March 09, 2021

    எமது விசாரணை மீது நம்பிக்கை வைத்திருந்த பேராயர் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் சமல்ராஜபக்ஷ

    ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவித மாற்றங்களையும் நாம் செய்யவில்லை, எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறாத ஒரு தாக்குதலில் அரசியல் தலையீடுகளினால் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

    ஆரம்பத்தில் எமது விசாரணை மீது நம்பிக்கை வைத்திருந்த பேராயர் இப்போது சந்தேகங்கொள்ளத் தேவையில்லை. விரைவில் குற்றவாளிகளை தண்டிப்போம் எனவும் அவர் கூறினார்.

    ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனதிபாதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பேராயர் உள்ளிட்ட பலர் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

    இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் தலைவரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிடம் இது குறித்து வினவிய போது அவர் கூறுகையில்,

    ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டது, ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் மீண்டும் இந்த தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தினார்.

    அரசாங்கமாக நாமும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்தினோம்.

    இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து அதிருப்தி இருப்பின், அல்லது அவர்களின் விசாரணை செயற்பாடுகளில் அதிருப்தி இருப்பின் அவர்களை மாற்ற வேண்டும் என கருதினால் அது குறித்து தெரிவியுங்கள் என ஜனாதிபதி, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் தெரிவித்தார்.

    ஆனால் அப்போது பேராயர் அதற்கான அவசியம் இல்லை எனவும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருந்தார். எனவே நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேராயரை ஏமாற்றும் விதமாகவோ அல்லது குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவோ செயற்படவில்லை.

    இப்போது ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள விசாரணை அறிக்கையில் எந்த குறைபாடுகளும் இல்லை, மிகச் சரியான அறிக்கையையே அவர்கள் முன்வைத்துள்ளனர்.

    அதேபோல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.

    முழுமையாக பரிந்துரைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் அவசியமான அனைத்தையுமே வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவித மாற்றங்களையும் நாம் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எமக்கு இல்லை.

    இவ்வாறான மிக மோசமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது, நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் கவலரமே ஏற்படக்கூடிய சம்பவமாக இது உருவாகியது, எனினும் உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிப்பதில் மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

    எனவே அதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. ஆனால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்கான நினைத்தால் போல் எம்மால் சட்டத்தில் கையில் எடுக்க முடியாது. சட்டமா அதிபரிடம் பொறுப்பை கொடுத்துள்ளோம்.

    அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள். குற்றவாளிகள் ஒருபோதும் காப்பற்றப்பட மாட்டார்கள். அதேபோல் எமக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வெறுமனே அரசியல் நோக்கத்திற்காக நாம் இவற்றை கையில் எடுக்கவும் இல்லை.

    முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு அப்போதைய ஆட்சியாளர்கள் சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். அவகளின் பலவீனமான செயற்பாடே இவ்வாறான மோசமான தாக்குதல் இடம்பெற காரணமாக அமைந்தது என்றார்.

    Virakesari 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமது விசாரணை மீது நம்பிக்கை வைத்திருந்த பேராயர் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் சமல்ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top