இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் பின்னடைவு, உள்நாட்டில் தற்போது பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அமைப்பிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையே, இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவை சந்திப்பதற்கான பிரதான காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கிரிக்கெட்டிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படக் கூடாது என்ற வகையிலான கடிதமொன்று, ஐ.சி.சி.யினால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் எலடயிஸினால், இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வாவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
‘தேர்தல் மூலம் நிர்வாகத்தை அமைக்க வேண்டும்’
2024-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாநாடு மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு, இலங்கை கிரிக்கெட் தமது சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, 2026-ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் 2027-ஆம் ஆண்டு மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்றால், தேர்தலில் தெரிவு செய்யப்படும் நிர்வாகமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என சர்தேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment