• Latest News

    January 05, 2024

    கல்முனை மாநகர சபையில் Onestop Service அங்குரார்ப்பணம்

     (ஏ.எஸ்.மெளலானா)

    கல்முனை மாநகர சபையில் பொது மக்களுக்கான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்பட்ட முகப்பு அலுவலகம் (Onestop Service) நேற்று திங்கட்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.

    மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கணக்காளர் கே.எம். றியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ. வட்டப்பொல, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நௌசாத்,  நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.பாஸித், ஏனைய பிரிவுகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான என். பரமேஸ்வர வர்மன், யூ.எம். இஸ்ஹாக், எம்.ஏ. அஹத், நிதி உதவியாளர் திருமதி எஸ். யோகராஜா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

    இதன்போது பொது மக்களுக்கான சேவை வழங்கல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    கல்முனை மாநகர சபையின் சேவைகளை பெற்றுக் கொள்ள வருகை தருகின்ற பொது மக்கள் இந்த முகப்பு அலுவலகத்தில் உள்ள கரும பீடங்களில் உரிய ஆவணங்களுடன் சோலை வரி மற்றும் சேவைக் கட்டணங்களை செலுத்திவிட்டு, இங்கு இருந்தவாறே தமக்கான சேவைகளை இலகுவாக நிறைவு செய்து கொண்டு செல்ல முடியும் என மாநகர ஆணையாளர் இதன்போது குறிப்பிட்டார்.

    இதன் மூலம் கடந்த காலங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் நிலவிய கால தாமதங்கள் மற்றும் தேவையற்ற அசெளகரியங்கள் முற்றாக தவிர்க்கப்படுவதுடன் தம்மால் செலுத்தப்படுகின்ற வரிகள் மற்றும் கட்டணத் தொகைகளுக்கு முழுமையான உத்தரவாதமளிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.




     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் Onestop Service அங்குரார்ப்பணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top