யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் இன்று மாலை தாக்குதலுக்கு
உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் வேட்பாளரான
தம்பிராசா சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்
ஒருவரின் ஆட்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
| தாக்குதலுக்குள்ளான வேட்பாளர் தம்பிராசா |
இதுபற்றி சம்பவ இடத்திற்கு விரைந்த
பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் தேர்தல்
ஆணையாளருக்கும் முறையிடப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணம் நாவாந்துறையில்
இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இராணுவத்தினர் சில நிவாரணப்
பொருட்களை வழங்குவதற்காக ஒழுங்கு செய்திருந்த நிகழ்வொன்றில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான சட்டததரணி
ரெமடியல் கலந்து கொண்டிருந்த சம்பவம் மூலம் தேர்தல் விதிமுறைகள்
மீறப்பட்டுள்ளதாக கபே என்ற சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான
மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்
சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
'இந்த நிகழ்வை தாங்களே ஒழுங்கு செய்திருந்ததை
இராணுவத்தினர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த வைபவத்தில்
விரும்பியோ விரும்பாமலோ வேட்பாளர் ஒருவர் கலந்து கொண்டிருப்பது தேர்தல்
விதிமுறைகளை மீறியது மட்டுமல்ல. தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு
செய்வதையே காட்டுகின்றது' என்றார் கீர்த்தி தென்னக்கோன்.
'தேர்தல் நடவடிக்கையென்பது சிவில் நிர்வாகத்துடன்
நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். வடக்கில் இராணுவம் தேர்தல் நடவடிக்கைகளில்
சம்பந்தப்படக் கூடாது என்பதை நாங்கள் கோரியிருந்தோம். அதற்கான உத்தரவாதமும்
வழங்கப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு நிலைமையில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றிருப்பது வடமாகாணம் மட்டுமல்ல ஏனைய இரண்டு மாகாண சபைகளுக்கான
தேர்தல்களையும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருக்கின்றது' என்றும் கீர்த்தி
தென்னக்கோன் கோரினார்.
0 comments:
Post a Comment