ஊடகவியலாளர்களது கமராக்களை பறித்து "ஊடகங்களில் இருப்பது நாய்கள், ஊடக நாய்கள் தான் பிரச்சினையை பெரிதாக்குகின்றனர்" என்று கூறி ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ரத்துபஸ்வல மக்கள் குடிநீர் கேட்டு பல நாட்களாக போராட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
நாளாந்த நடவடிக்கைகளுக்கு மற்றும் குடிக்க சுத்தமான நீர் வேண்டும் என்றே அவர்கள் கேட்டனர்.
ஆனால் சுத்தமான நீர் கேட்ட மக்களுக்கு, அரசாங்கம் வழங்கிய பதில் இராணுவத்தை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தி, பொல்லுகளால் தாக்கி, கொலை செய்தமை ஆகும்.
மக்கள் விடுதலை முன்னணி என்ற அடிப்படையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இந்த மிலேட்சைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தை தெரிவிக்கிறோம்.
தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பல முறை மக்கள் கோரிக்கை விடுத்த போதும் அரசாங்கம் அதனை செய்யத் தவறி விட்டது.
அதனால் தற்போது பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இனியாவது தாமதிக்காது ரத்துபஸ்வல மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு வெலிவேரிய பகுதியில் அமைதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment