• Latest News

    September 10, 2013

    பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு ;ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் ரவூப் ஹக்கிம்

    (ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்)
    கொழும்பில் பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் இலங்கையில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அது அமையப்போகின்றது. ஆகையால், ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இந்த பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோளையும் அழைப்பையும் விடுக்கின்றேன்.  
    இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
    அவர் மேலும் உரையாற்றுகையில்,
    56 ஆண்டுகளுக்கு முன்னர் இதே புதுடில்லி நகரில் பர்மா, இந்தியா, இந்தோனேஷியா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளோடு இலங்கையும் சேர்ந்து ஆசிய சட்ட ஆலோசனை குழுவை நிறுவியது நினைவுக்கு வருகிறது.
    இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பொழுது ஆறு உறுப்பு நாடுகளோடு நிறுவப்பட்ட இவ்வமைப்பு ஆசியா, ஆபிரிக்கா ஆகிய உலகின் இருபெரும் கண்டங்களில் உள்ள 47 உறுப்பு நாடுகளுடன் சர்வதேச அரங்கில் சமாதானத்துக்கும், முன்னேற்றத்திற்குமான அளப்பரிய சாதனைகளை ஈட்டி வருவதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
    இவ்வமைப்பு இதன் அண்மைக்கால அமர்வுகளின் போது உலக சமாதானம், நிலையான அபிவிருத்தி, சுற்றாடல், குற்றச் செயல்களை தடுத்தல், சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்களில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    இதன் 50 ஆவது அமர்வு 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ 'களவாகப் பணம் கடத்தல், ஆயுத பரிகரணம், மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன சர்வதேச பயங்கரவாதத்தோடு தொடர்புபட்டு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியதோடு அவற்றை முறியடிக்க துரிதமான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியிருந்தார்.
    இதற்காக வீணாக காலத்தை மேலும் கடத்த முடியாது. இவ்வாறான சட்ட விரோத செயல்களை முறியடிப்பதற்கு சட்டத்தின் ஆட்சியின் ஊடாக மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.
    இந்தச் செயலமர்வில் கடல்சார் சட்டம், ஊழல்களை முறியடிப்பதில் எதிர்நோக்கும் சவால்கள், சர்வதேச சட்டத்தின் கீழ் பலஸ்தீன அரசு பற்றிய விஷேட கவனஈர்ப்பு, எல்லை கடந்த தேசிய சட்டவாக்கம் மூன்றாம் தரப்புக்கு எதிரான தடைகள் என்பன பற்றி சீர்தூக்கிப் பார்த்து ஆராயப்படுகின்றது.
    இந்த அமைப்பிற்கும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை மிகவும் திருப்தியடைந்துள்ளதோடு, அதன் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் உற்று நோக்கியும் வருகிறது. அதன் அண்மைக்கால நடவடிக்கைகளான வழக்குத் தொடருதல், நாட்டை விட்டு வெளியேற்றுதல், அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கினால் ஏற்படும் விளைவுகள் என்பன காணப்படுகின்றன.
    இலங்கையில் 2014 ஆம் ஆண்டு நிறுவப்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தினூடாக தமது நாடுகளில் வர்த்தக மற்றும் தொழில்சார் பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென உறுப்பு நாடுகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
    இந்த சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் சுதந்திரமாக இயங்கவுள்ளதோடு சர்வதேச நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்சார் பிரச்சினைகளை இணக்கப்பாட்டுடன் சுமூகமாக தீர்ப்பதற்கு பெரிதும் உதவும் என்பது எமது நம்பிக்கையாகும். ஆகையால், ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் மன்றங்கள் கொழும்பை தமது நடுத்தீர்ப்பு விடயத்தில் பயன்படுத்த முன்வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
    அடுத்த இரண்டு மாதங்களில் கொழும்பில் பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் இலங்கையில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அது அமையப்போகின்றது. ஆகையால், ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இந்த பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோளையும் அழைப்பையும் விடுக்கின்றேன்.  



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு ;ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top