• Latest News

    April 02, 2014

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்: கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர்

    எஸ்.அஷ்ரப்கான்;
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரமே கொழும்பு மாவட்ட வெற்றி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

    நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

     அவர் மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

     நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றதன் மூலம் எமது கட்சியும், தேசியத் தலைமையும் நாட்டிலுள்ள முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வெற்றிக்காக கட்சிக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட வாழ் முஸ்லிம்கள், கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பாகவும், எனது தனிப்பட்டதுமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இன்று எமது கட்சி வடகிழக்கில் அமைச்சர்களையும், பிரதியமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்களையும், உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

    இவ்வாறிருக்கையில் எமது கட்சி முதற்தடவையாக வடகிழக்கு வெளியே ஒரு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவம் வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இன விரோத செயற்பாடுகளுக்கு மிகத் தைரியமாக, சாணக்கியத்துடன் செயற்பட்டுள்ளதுடன் அம்மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்துள்ளது.

    இதனை புரிந்து கொண்ட கொழும்பு மாவட்ட கல்விமான்கள், உலமாக்கள் எமது கட்சியினை இத்தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட எமது தலைமைத்துவம் குறுகியகால எல்லைக்குள் எந்த விதமான ஆதரவாளர்களும், அமைப்பாளர்களும் இல்லாத கொழும்பு மாவட்டத்தில் கட்சியின் சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

    இது எமது தேசியத் தலைமையின் தைரியமும், அவர் மக்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையுமாகும் எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்: கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top