• Latest News

    November 24, 2014

    கட்சித் தாவல்கள் இன்றும் இடம்பெறலாம்

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு பெறும்   அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துவருகின்ற நிலையில் எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியிலிருந்து எதிரணிக்கும்  இன்றைய தினமும் கட்சித் தாவல்கள்  இடம்பெறலாம் என்று  பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

    பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது   இந்தக் கட்சித் தாவல்கள்  இடம்பெறாமல் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இன்றைய தினம்  சில அமைச்சர்களும்   பாராளுமன்ற உறுப்பினர்களும்     எதிரணி பக்கம் செல்லலாம் என்று   தகவல்கள் தெரிவித்தன.

    மேலும்   பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின்   முக்கியஸ்தர் ஒருவரும்   சில எம்.பி. க்களும்   இன்றைய தினம் ஆளும் ஐக்கிய முன்னணியில் இணைந்துகொள்ளும்  சாத்தியங்களும் உள்ளன.

    மேலும்    பாராளுமன்ற உறுப்பினர்களை   தமது பக்கம்   இழுத்துக்கொள்வதற்கான  காய்நகர்த்தல்களும் முயற்சிகளும் இரண்டு பக்கங்களிலிருந்தும்    மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

    இந்நிலையில் இன்றைய வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பின்போது இரண்டு பக்கங்களில் இருந்தும் கட்சித் தாவல்கள் இடம்பெறலாம் என்றும்    எதிர்பார்க்கப்படுகின்றது.

    ஏற்கனவே   முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன்  ஆளும் கட்சி உறுப்பினர்களான  துமிந்த திசாயக்க  ராஜித்த சேனாரட்ன  மற்றும் எம்.கே.டி. எஸ். குணவர்த்தன ஆகியோர்      கடந்த வௌ்ளிக்கிழமை எதிரணியுடன் இணைந்துகொண்டனர்.

    சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்  பொதுச் செயலாளரரான   மைத்திரிபால சிறிசேன   எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக   எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியி்டவுள்ளார்.    இதன்படி   ஆளும் கட்சியிலிருந்து மேலும் சிலர்  எதிரணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக  மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

    எனினும்  இதன் பின்னர் எந்தவொரு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும்   எதிரணியில் இணைந்துகொள்ளமாட்டார்கள் என்று    நேற்று  அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி   திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதேவேளை    தானும் தனது தந்தையும் எக்காரணம் கொண்டும்   சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து   விலகிச் செல்லமாட்டோம் என்று    களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   விதுர விக்ரமநாயக்கவும் நேற்று முன்தினம்  தெரிவித்திருந்தார்.
    Virakesari -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்சித் தாவல்கள் இன்றும் இடம்பெறலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top