• Latest News

    November 17, 2014

    தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த அமளி துமளி இதுதான்…

    ஊடுருவி-முகா வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர் ஆகிய இருவரும் முகா தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கடுமையான முறையில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்ட சம்பவம் தொடர்பில் எமது இணையத்தளத்திற்கு தகவல் கிட்டியுள்ளது.
    இந்த வாய்த்தர்க்கம் – கரையோர மாவட்டம் வேண்டாம்: அதற்கு மாறாக கிழக்கு முதலமைச்சர் பதவியை மட்டும் பெற்றுத் தாருங்கள் என்று ஜெமீலும் நிஸாம் காரியப்பரும் தலைவர் ஹக்கீமை வேண்டி நின்றதை அடுத்தே இந்த வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
    அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே முகா ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹக்கீமிடம் கடுமையாக வலியுறுத்தியும் உள்ளனர்.

    முகா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று (16) பம்பலப்பிட்டி சிலோன் சிற்றி ஹோட்டலில் இடம்பெற்றது.

    மேற்சொன்ன வாய்த் தர்க்கம் இந்த ஹோட்டலில் இருந்தே ஆரம்பித்துள்ளது. பின்னர் அது ஹக்கீமின் இல்லம் வரை சென்று பெரும் அமளி துமளி ஏற்பட்டு இறுதியில், – ஹக்கீமின் கடும் எச்சரிக்கையுடனான தொணியுடன் அவர்கள் வெளியேறிச் சென்றதையடுத்தே வாய்த் தர்க்கம் முடிவுக்கு வந்துள்ளது.

    ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது , கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை மாத்திரம் தனியாக அழைத்துச் சென்ற மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் – கிழக்கு முதலமைச்சர் பதவியில் மாற்றம் வரப்போகின்றது, அரசுக்கு சார்பாக முகா செயற்பட வேண்டும் என்ற ரீதியில் இந்த கூட்டத்தில் கருத்துக்களை முன்வையுங்கள் என்று மாநாகர சபை உறுப்பினர்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அதன் படி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஜெமீல் கூறியதைப் போன்றே அரசுக்கு சார்பாக செயற்படுங்கள் என ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டனர்.

    இதன் பின்னர் குறித்த ஹோட்டலில் வைத்து ரவூப் ஹக்கீமை சந்தித்த ஜெமீல் – கிழக்கு முதலமைச்சர் பதவியை எனக்கு பெற்றுத் தாருங்கள் என்று மன்றாடியுமுள்ளார்.
    இதற்கு எதுவித பதிலும் அளிக்காத தலைவர் ஹக்கீம், அவரது பேச்சை அலட்சியம் செய்தவராக ஹோட்டலை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.

    இதன் பின்னர் தலைவர் ஹக்கீமை தொடர்பு கொண்ட ஜெமீலும் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பரும் தங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் நேரம் ஒதிக்கி தாருங்கள் என்று கேட்டனர்.
    இதன் படி அன்றைய தினம் மாலை 05 மணிக்கு ஹக்கீமின் இல்லம் சென்று அவருடன் உரையாடியுள்ளனர்.

    இதன் போது நிஸாமும் ஜெமீலும் – மகிந்ததான் வெல்லுவார் எதிர்க்கட்சி வேட்பாளர் பொருத்தமானவர் அல்லர். எனவே மகிந்தவுக்கு சார்பாக செயற்படும் தீர்மானத்தில் முகா உறுதியாக இருக்க வேண்டும். இன்று காலை கலந்து கொண்ட உறுப்பினர்களும் உங்களுடன் பேசும் போது அதனையே வலியுறித்தியுமுள்ளனர் என்றனர்.

    இதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம் கரையோர மாவட்டம் மற்றும் ஏனைய எமது கோரிக்கைள் தொடர்பில் இதுவரை அரசு எதுவித உறுதியையும் தரவில்லை. ஹஸன் அலி பேசிய பின்பும் அந்த உத்தரவாதம் இன்னும் கிடைக்க வில்லை. அப்படி இருக்கும் போது எப்படி என்று இழுத்தார்….

    இல்லை இல்லை எமக்கு கரையோர மாவட்டம் வேண்டாம். கிழக்கு முதலமைச்சர் பதவியை பெற்றெடுங்கள். அதன் மூலமாக மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார் ஜெமீல்.
    அப்போது குறிக்கிட்ட கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர், ஜெமீல் சொல்வது சரிதான். ஜெமீலையே முதலமைச்சர் ஆக்குங்கள், மக்களை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம், மக்களை திசை திருப்பி அவர்களின் மனங்களை மாற்றுவது எப்படி என்று எங்களுக்கு நன்கு தெரியும். அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அந்தப் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

    தலைவரே! முதலமைச்சர் பதவியை எப்படியாவது எனக்கு எடுத்து தாருங்கள் நான் கடனாளியாக உள்ளேன்.அது உங்களுக்கும் தெரியும் தானே என்றார் ஜெமீல்.
    நீங்கள் தானே அறிக்கை விட்டிருந்தீர்கள்… கரையோர மாவட்டம் தராவிடடால் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று என தலைவர் ஹக்கீம் ஜெமீலை பார்த்து திருப்பிக் கேட்டார்.
    சேர் அது ஒரு தந்திரம். முதலமைச்சர் பதவி தான் எனக்கு வேண்டும் என்றார் ஜெமீல்.
    துலைவர் அவர்களே கரையோர மாவட்டம் என்பது பழைய கதை. அதை தூக்கி எறிந்து விட்டு முதலமைச்சர் பதவியை பெற்று ஜெமீலை பலப்படுத்துங்கள். இல்லையென்றால் நான் ஒத்துழைக்கமாட்டேன் என்றார் நிஸாம் காரியப்பர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் இருதரப்பினர்க்கும் இடையில் இன்னும் சில சொற்பிரயோகங்கள் பாவிக்கப்பட்டு பெரும் வாய்த் தர்க்கம் மூண்டுள்ளது.

    மேற்படி இருவரின் உரையாடலை அவதானித்த ஹக்கீமுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதுடன் கடும் விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

    இவர்கள் இருவரும் ஹக்கீமின் வீட்டை விட்டு வெளியேறி சென்றதன் பின்னர் – கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் – நடந்த உரையாடலை விபரித்ததுடன் – இறுதி நேரத்தில் கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் நடந்துகொள்வதாகவும் கூறி ஹக்கீம் தனது விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
     
    ஜெமீலின் மாற்றத்திற்கான பின்னணி என்ன ?

    கரையோர மாவட்டம் தராவிடில் முதலமைச்சர் பதவியை முகா ஏற்கமாட்டாது என்று கடுமையான முறையில் அறிக்கை விட்டும் , அரசை விமர்சித்தும் வந்த மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இவ்வாறு திடீரென மாறுவதற்கு காரணமாக அமைந்தது என்ன?

    அது இதுதான்….

    ஜெமீலின் விமர்சனங்களை அவதானித்த அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை அண்மையில் இரகசியமான முறையில் கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
    ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு முகாவின் ஆதரவை பெற்றுத் தந்தால் நீங்கள் கேட்பது போன்று முதலமைச்சர் பதவியை உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம். தலைவர் எமக்கு ஆதரவு வழங்க தயாராகத்தான் உள்ளார். அதே போன்று ஏனைய எம்பிக்கள் உயர்பீட உறுப்பினர்களின்; ஆதரவையும் பெற்றுத்தாருங்கள் என்று பேரம் பேசியுள்ளனர்.

    அந்த அமைச்சர்களின் நிகழ்சி நிரலுக்கு இணங்கியேதான் இப்போது ஜெமீலும் நிஸாமும் கரையோர மாவட்டம் வேண்டாம் முதலமைச்சர் பதவியை தா என்ற கோசம் எழுப்புவதற்கு காரணமாகும்.
    கரையோர மாவட்டத்தை வழங்குவதில் ஏற்கனவே உடன்பாடு இல்லாமல் இருக்கும் அரசுக்கு – இவர்கள் இருவரும் முதலமைச்சர் பதவியை முன்னிலைப்படுத்துவது நல்லதொரு வாய்ப்பாகவே அரசு அமைந்து விட்டது மட்டுமன்றி மறுபக்கம் முகாவுக்குள்ளேயே கரையோர மாவட்டத்தை எதிர்க்கும் அணியொன்றை அரசு கர்ச்சிதமாக ஏற்படுத்தியும் உள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்லதொரு சாண்றாக அமைகின்றது.

    இது இவ்வாறு இருக்க பஸில் ராஜபக்ச நேற்று காலை அலரி மாளிகையில் நடத்திய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்கு கட்சி உறுப்பினர்களை செல்ல வேண்டாம் என தலைவர் ரவூப் ஹக்கீம் பணித்ததற்கு காரணம் மேற்படி இருவரினதும் திருகுதாளம் ஹக்கீமுக்கு வெளிப்பட்டதன் பின்னணியிலேயே ஆகும் என அறிய முடிகின்றது.

    இவர்கள் அவ்வாறு செல்லும் பட்சத்திலும் கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்றை ஏற்படுத்தி சிலர் முயற்சிக்கலாம் என்று தலைவர் ஹக்கீமுக்கு கிடைத்த தகவல் ஒன்றும் இந்த தடைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

    இந்நிலையில் ஜெமீலை – அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னர் பெறுமதி மிக்க ஒரு சலுகை ஒன்றை தொடர்ச்சியாக பெறும் வண்ணம் அவருக்கு ஏற்பாடு ஒன்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரியவருகின்றது.
    http://srilankamuslims.lk

    அமைச்சர் ஹக்கீமுடன் வாய்த்தர்க்கமா? கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் மறுப்பறிக்கை!

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    கல்முனை கரையோர மாவட்டம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுங்கள் என்று எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நான் வாய்த்தர்க்கப்பட்டதாக இணையத் தளம் ஒன்றில் வெளிவந்துள்ள செய்திக் கட்டுரை முற்றிலும் கற்பனையில் புனையப்பட்ட செய்தியாகும் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவிக்கின்றார்.

    இந்த செய்திக் கட்டுரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

    “நடக்காத ஒரு விடயத்தை வேண்டுமென்றே கற்பனையில் வடிவமைத்து குறித்த இணையத் தளத்தில் வெளியிட்டிருப்பதன் மூலம் எனக்கும் சகோதரர் ஜெமீல் அவர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதையிட்டு எனது கவலையையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இச்செய்தியானது எம்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரால் திட்டமிட்டு வழங்கப்பட்ட முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு வேண்டுமென்றே எழுதப்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

    இவ்வாறான ஒரு சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரி- உண்மையை கண்டறிய முற்படாமல்- முற்று முழுதாக கற்பனையில் புனையப்பட்ட செய்திக் கட்டுரையை அப்படியே இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதானது ஊடக தர்மத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக கலந்தாலோசனைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கட்சிக்குள் குழப்பங்களையும் மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களையும் ஏற்படுத்தி தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு இதன் மூலம் அவர்கள் முயற்சிக்கின்றனர்.

    இதனை தாம் வன்மையாக கண்டிப்பதுடன் இச்செய்திக் கட்டுரை தொடர்பில் குறித்த இணையத் தளம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஆலோசித்து வருகின்றேன்” என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிஸாம் காரியப்பர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த அமளி துமளி இதுதான்… Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top