அம்பாறைக்கு தனி மாவட்டச் செயலகமொன்றை
அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் உறுதிமொழி
வழங்கியிருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன்
அலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமன்றி, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடுவது பொது வேட்பாளரா இல்லையா என்பது பற்றி எமக்குப் பிரச்சினை
கிடையாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்
ஒருவரை நிறுத்தி போட்டியிடும் தேர்தல் கிடையாது. அம்பாறைக்கு நிர்வாக
மாவட்டமொன்றை கோரியிருந்தோம். இவ்வாறு கோரியமை தொடர்பில் நாடாளுமன்ற
உறுப்பினர் விஜயதாச ராஜபக்சஇ நாம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக
குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பிரதமர் டி.எம்.
ஜயரட்னவும் ஆதரவளித்திருந்தார். நாட்டை பிளவுபடுத்தி தருமாறு நாம்
கோரவில்லை. ஓர் நிர்வாக மாவட்டமொன்றை வழங்குமாறே நாம் கோரினோம். இந்தக்
கோரிக்கையை சில தரப்பினர் திரிபுபடுத்தி நாட்டை பிளவடையச் செய்வதாக
பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
தனி நிர்வாக மாவட்டம் குறித்த கோரிக்கைக்கு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், முன்னாள் பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவும் உறுதியளித்திருந்தனர். 2012 கிழக்கு மாகாண சபையில் ஆட்சி
அமைத்த அரசாங்கம் நிர்வாக மாவட்டம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு
வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது என ஹசன் அலி சிங்களப்
பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையென்றால் அவர்களின் கோரிக்கைக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment