• Latest News

    November 04, 2014

    மீரியாபெத்த மண்சரிவுக்கு மாகம்புரவும் மத்தலவுமே காரணம்: சண்.குகவரதன்

    ஹம்பாந்தோட்டையில், மாகம்புர  துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லந்த, மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என பொறியியலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுசெயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சண்.குகவரதன், இன்று(04) தெரிவித்தார்.

    இதனால் மண்சரிவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வேறு இடங்களில் காணிகளை உடனடியாக வழங்கி அங்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

    அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.

    ஹம்பாந்தோட்டை துறை முகத்தை அமைப்பதற்கு கடல் ஆழமாக தோண்டப்பட்டமையும்  மத்தல பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் என சில புவியியலாளர்கள் கூறுவதாக சண்.குகவரதன்  கூட்டிக்காட்டினார்.

    அரசாங்கத்தின் இந்த முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களினால் உறவினர்களின் உயிர்களையும் இருப்பிடங்களையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும்.

    75 சிறுவர், சிறுமியர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இது தொடர்பான வேலைத் திட்டங்களை பாராளுமன்றத்திலும் ஊவா மாகாண சபையிலும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

    பொது மக்களும் பொது அமைப்புகளும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும்; தங்களால் இயன்றளவு நிவாரண உதவிகளை செய்கின்றன.
    இதனால், அரசாங்கம் தங்களுக்குரிய நிவாரண பணிகளை தட்டிக்கழிக்க முடியாது. கொஸ்லந்த, மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் மக்கள் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் அரசாங்கம் கூற முடியாது.

    ஏனெனில், மாற்று இடங்களை கையளிக்காமல் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய சண்.குகவரதன், மக்களுக்கான பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்வதாகவும் குற்றம் சுமத்தினார்.

    திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் மக்களை பாதிக்கும் வகையில் அனல் மின் நிலையம் நிறுவப்படவுள்ளது.

    மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு எற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

    அதேபோன்று காலி முகத்திடலுக்கு அருகில்; 233 ஹெக்டேயர் பரப்பளவு கடற்பரப்பை மூடி, துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு சீனாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

    அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், சூழவுள்ள பிரதேசங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பிய சண்.குகவரதன்,  மக்களைப் பற்றி அக்கறைப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் யாருக்காக எனவும் கேள்வி தொடுத்தார்.

    மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளின் நிதி கிடைக்கின்றது என்பதற்காக சாதாரண குடிமக்களை பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஏற்கக்கூடாது. அது அழிவுக்கே வழிவகுக்கும்.

    இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீரியாபெத்த மண்சரிவுக்கு மாகம்புரவும் மத்தலவுமே காரணம்: சண்.குகவரதன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top