• Latest News

    August 13, 2016

    கடலரிப்பும் போட்டி அரசியலும்!

    எஸ்.றிபான் -
    அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் கிராhம் மிக மோசமான கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், ஒலுவில் கிராமத்தின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டிருக்கின்றது. இலங்கையில் மிக மோசமான வகையில் கடலரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒலுவில் கிராமத்தை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அக்கிராம மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசியல் கட்சிகளினாலும், மக்கள் பிரதிநிதிகளினாலும் முடியவில்லை. கடந்த 2016.07.29 வெள்ளிக் கிழமை ஒலுவில் மக்கள் கடரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தும் வரைக்கும் அரசாங்கத்தினதும், முஸ்லிம் கட்சிகளினதும் கண்கள் திறக்கப்படவில்லை.
    ஒலுவில் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கவிடமும், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன் போது ஒலுவில் கடரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
    கடந்த வாரம் துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை பார்வையிட வந்தார்கள். இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இணைந்து கொண்டார். அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டார்கள்.
    ஒலுவில் கிராமத்திற்கு இதற்கு முதல் ஒரு தடைவ கடலரிப்பை பார்வையிட அமைச்சர் றிசாட் வந்தார். அதே தினத்தில் ரவூப் ஹக்கீமும் வருகை தந்தார். ஒலுவில் கடலரிப்பை பார்வையிடுவதில் இவர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும் காட்டும்; அக்கறை, அதனை தடுப்பதற்கு எடுக்கப்படுவதில்லை. ஏற்கனவே, கடலரிப்பை பார்வையிட்ட இவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஒலுவில் கிராமத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இரு கட்சிகளின் தலைவர்களும், கடலரிப்பை பார்வையிடுவதில் காட்டும் போட்டி அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. ஒலுவில் கிராமத்தின் கடலரிப்பில் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள இக்கட்சிகள் முண்டியடித்துக் கொண்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும். ஒரு ஊரின் அழிவில் இலாபம் தேட எத்தனிப்பது கேவலமான அரசியலாகும். இதே வேளை, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஒலுவில் கடலரிப்பை அரசியலாக்க வேண்டாமென்று கேட்டுள்ளார்.
    ஆனால், அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒலுவில் கடலரிப்பை மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருந்த பின்னரும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் ஒலுவில் கடலரிப்பு பற்றியும், அதன் ஆபத்துப் பற்றியும் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தன. இப்பிரதேச மக்கள் கடலரிப்பை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்களை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
    இவை எல்லாவற்றிக்கும் மேலாக ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் நாட்களில் ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகார சபைக்குரிய விடுதியில்தான் அதிகம் தங்குவார். இவ்வாறு தங்கும் நாடகளில் காலை வேளை உடற்பயிற்சிக்காக ஒலுவில் கடற்கரையில் நடந்து செல்லும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். இதன் மூலமாக ரவூப் ஹக்கீம் கடலரிப்பை நேரடியாக பல தடவைகள் பார்த்துள்ளார். இருந்தும் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று ஒலுவில் பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
    ஏற்கனவே, ஒரு தடைவ கடலரிப்பை பார்வையிட்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஒலுவில் மக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர்தான் அவர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகளையும் சந்தித்துக் கொண்டார். இதன் பின்னர்தான் ரவூப் ஹக்கீமும் செயற்பட்டார். ஆர்ப்பாட்டமும், றிசாட்டின் நடவடிக்கையும் இல்லாதிருந்தால் ரவூப் ஹக்கீம் கடலரிப்பில் கவனம் செலுத்தியிருப்பாரா என்ற சந்தேகம் முன் வைக்கப்படுகின்றது. இதனை நியாயமற்ற சந்தேகம் என்று சொல்ல முடியாது. ஒலுவில பிரதேச மக்கள் தமது கட்சியின் பக்கம் வர வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் சிந்திக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் உள்ள ஒலுவில் மக்களின் ஆதரவை இழந்து விடக் கூடாதென்ற சிந்தினையில் ரவூப் ஹக்கீம் இருக்கின்றார். ஆதலால், ஒலுவில் கடலரிப்பை முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலாக்கிக் கொண்டிருக்கையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அரசியலாக்காதீர்கள் என்று சொல்லுவது ரவூப் ஹக்கீமுக்கும் பொருந்தும். கடலரிப்பை தடுக்க முடியாது போனாலும் ஒலுவில் மக்களின் ஆதரவு கெட்டு விடக் கூடாதென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் விழிப்பாக இருக்கின்றது என்பதுதான் றிசாட் நடவடிக்கைகளில் இறங்கும் போது ஓடி வந்து பார்வையிடுவது தாங்களும் ஒலுவிலை கைவிடவில்லை என்று காட்டுவதாக உள்ளது.
    ஒலுவிலைப் பொறுத்தவரை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய கடலரிப்பு தடுக்கப்பட வேண்டும். இதனை யார் செய்தாலும் கவலையில்லை. ஆனால், இதனை தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பவர்களை;;, எடுக்கும் கட்சியை அக்கிராம மக்கள் மறக்கமாட்டார்கள். அதற்கான நன்றிகளை தேர்தல்கள் மூலமாக காண்பிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
    ஒலுவில் கடலரிப்பை நிபுணத்துவமிக்கவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் சுமார் ரூபா 03 ஆயிரம் கோடிகள் செலவாகுமென்று துறைமுகங்கள் அதிகாரங்கள் சபையின் அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இப்பாரிய தொகையை அரசாங்கத்தினால் செலவு செய்வதற்கு கடினமாக இருக்கும் என்பதனால் வெளிநாடுகளினதும், வெளிநாட்டு நிறுவனங்களினதும் உதவியைப் பெற்றுத்தான் பூரணத்துவமாக கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைளை எடுக்க முடியுமென்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
    அமைச்சர் றிசாட் பதியுதீனின் தகவல்களின் படி ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு தற்காலிக நடவடிக்கை ஒன்றே எடுக்கப்படவுள்ளது. அதாவது, பாரிய கருங்கற்களை கரையில் போடுவதற்குரிய நடவடிக்கைகளே எடுக்கப்படவுள்ளது. இவ்வாறுதான பிரதி அமைச்சர் ஹரீஸும் தெரிவித்துள்ளார்.
    ஏற்கனவே, கடலரிப்பு தீவிரமடைந்த போது தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு இடங்களில் தடுப்பு அணைகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த அணைகளினால் கூட கடலரிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம், இதற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
    ஒலுவிலில் துறைமுகம் அமைப்பதற்குரிய ஆய்வுகளை நிபுணத்தவம் வாய்ந்தவர்கள் மேற்கொண்ட போது, இங்கு துறைமுகம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஒலுவில் பகுதியில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு மிகவும் உறுதியான முறையில் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆதலால், இங்கு ஒரு மீன் பிடித்துறை முகத்தை அமைப்பதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளாது துறைமுகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீன்பிடித் துறைமுகம் மாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் வர்த்தக துறைமுகமொன்றினை அமைப்பதற்குரிய ஆரம்ப வேலைகள் நடைபெற்றுள்ளன.
    ஆதலால், தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுத்து நிறுத்தாது. மீண்டும் கடலரிப்பு ஏற்படும். இதே வேளை, சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்திற்கு பாரிய கருங்கற்களை போடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க தலைமையில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்றினை அரசாங்கம் நியமித்துள்ளது.
    இதே வேளை, தற்காலிக இரண்டு கிலோ மீற்றர் தூரத்;திற்கு பாரிய கருங்கற்களை போட்டால் ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கலரிப்பை குறைப்பதற்கு முடியுமாக இருக்கலாம். ஆனால், இன்னுமாரு பிரதேசத்தில் அதாவது கற்கள் போடப்பட்டுள்ள இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கடலரிப்பு ஏற்படும். இதனால், நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்படும். தற்போது கூட நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒலுவில் துறைமுக பிரதேசத்திற்கு தெற்கு பகுதியில் அதாவது பாலமுனையில் கடலரிப்பு இல்லை. அங்கு பாரிய அளவில் மணல் வார்க்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது மேற்கொள்ளப்படவுள்ள தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிந்தவூர் பிரதேசத்தை பாதிக்கும். ஏற்கனவே நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்புக்கள் கடலரிப்பினால் அழிந்துள்ளன. ஒலுவிலை பாதுகாக்கும் தற்காலிக நடவடிக்கைகள் நிந்தவூரில் அழிவை ஏற்படுத்துமாயின் நிந்தவூருக்கு அப்பால் உள்ள காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்படலாம்.
    ஆகவே, ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்நடவடிக்கை இன்னுமொரு பிரதேசத்தை காவு கொடுப்பதாக இருக்கக் கூடாது. வயிற்று வலிக்கு பதிலாக தலையிடியை வாங்கிக் கொண்டதாகவே இருக்கும்.
    ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கைகளில் கூட அரசியல் ஆதாயம் தேடிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முயற்சிகளை எடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பல எதிர் நடவடிக்கைகளின் போது இவ்விரு கட்சிகளும் சமூக நலன் என்பதனை விடவும், அந்த எதிர் நடவடிக்கைகளினால் எவ்வாறு அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளலாம் என்று சிந்தித்தன. அதே வேளை, அரசாங்கம் மௌனம் காக்குமாறு கேட்டுக் கொண்ட போது பேசாதிருந்தார்கள். ஆகவே, இவ்விரு கட்சிகளும் தங்களின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அரசியல் ஆதாயத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளன. சமூகம் என்ற உயரிய சிந்தனையில் செயற்பட வேண்டும். ஒரு கூட்டுப் பொறுப்புடன் ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அத்தோடு, ஏனைய பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்படாத வகையில் அந்நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
    முஸ்லிம்களின் வாக்குப் பலத்தால் அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டுமன்றி தேசிய காங்கிரஸும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சினைகளை மக்கள் கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவைகளின் மூலமாக தெரிவிப்பதற்கு முன்னதாக அதற்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மக்களின் காலடிக்கு வந்து இது சமூகக் கட்சி, நமது கட்சி போன்ற கவர்ச்சி வார்த்தைகளை வீட்டிற்கு வீடு சென்று வாக்குகளைப் பெற்றுக் கொள்ள நேரமும், வாய்ப்பும் இருக்குமாயின் அதனை தேர்தலின் பின்னரும் செய்ய வேண்டும். குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு பிரச்சினைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஆகக் குறைந்தது மக்கள் தங்களின் பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைக்கும் போதாவது தீர்த்து வைக்க வேண்டும். அதுதான் நல்ல மக்கள் பிரதிநிதிக்கு அழகு. மக்களின் உரிமைகள், சலுகைகளின் மீது பற்றுக் கொண்ட அரசியற் கட்சிக்கு கௌரவத்தைக் கொடுப்பதாகவும், மக்கள் மத்தியில் மதிப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.
    ஆனால், முஸ்லிம்களின் வாக்குகளை தேர்தல் காலத்தில் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையற்று பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளில் மாத்திரம் கவனத்தை செலுத்துவது ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையல்ல.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்வீட்டு பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக மோசமான உள்வீட்டு முரண்பாடுகளில் மாட்டிக் கொண்டுள்ளன. கட்சியில் தமது தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் கடும் பிரயத்தனங்களைப் போன்று மக்களின் பிரச்சினைகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்வீட்டுப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள இவ்விரு கட்சிகளும் ஒலுவில் கடலரிப்;பு விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்படுவதுதான் சிறந்ததாகும்.  மக்கள் மத்தியில் ஏமாற்று நாடகங்களை அரங்கேற்றி கட்சிக்கான செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் இறுதியில் இகழ்வையும், வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதுவே முஸ்லிம் கட்சிகளின் சிந்தனைக்கு நாம் விடுக்கும் செய்தியாகும். 
    நன்றி - விடிவெள்ளி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடலரிப்பும் போட்டி அரசியலும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top