எம்.ஏ.றமீஸ் -வடக்கு மாகாணத்தின் பிரேரணைக்கு எதிராக கிழக்கு பிரேரணை நிறைவேற்றாதிருப்பதேன்? : அதாவுல்லாஹ் கேள்வி
வட மாகாணத்தோடு கிழக்கை இணைப்பது பற்றி வட மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்தோடு இணைப்பதற்கு எந்தத் தேவையும் கிடையாது என கிழக்கு மாகாண சபையில் இதுவரை எந்தத் தீர்மானத்தினையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றாதிருப்பது ஏன் என நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, ஜுலைக் கலவரம் போன்ற பாரிய விடயங்கள் இந்த நாட்டிலே நிகழ்ந்த போதிலும் தமிழ் மக்கள் மனம் தளரவில்லை அஞ்சவில்லை கலங்கவில்லை திடமாகவே இருந்தார்கள்.
ஏனெனில் இப்போதுதான் எமக்கு தனி இராச்சியம் பிறக்கப்போகின்றது வெளிநாடுகள் இனிமேல்தான் எம்மை ஏற்றுக் கொள்ளப்போகின்றன என்று உறுதியாக இருந்தார்கள்.
ஆனால் சில நாசகாரச் செயற்பாட்டாளர்களால் எங்கேனும் ஓர் சிறு கண்ணாடி உடைக்கப்படுகின்றபோது எமது முஸ்லிம் சமூகத்தின் கவனமும் சிந்தனையும் கலைக்கப்பட்டு வேறு திசைகளுக்கு அவர்கள் திருப்பப்படுவது வேதனையளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் பிரதான வீதியருகில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிலர் வேண்டுமென்றே குழப்பங்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்க எத்தனிக்கின்றார்கள்.
பொதுபலசேனா போன்ற பேரினவாத இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்தினை மாத்திரம் ஏன் சாடுகின்றது. வட கிழக்கிலும் வட கிழக்கிற்கு வெளியேயும் எத்தனையோ பௌத்த குருமார்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் எத்தனையோ சிங்களத் தலைமைகள் வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டார்கள் அது ஏன் அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் பௌத்த சிலையொன்று தகர்க்கப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் ஏன் இந்த சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருக்கின்றன.
டயஸ்போராக்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவ் அமைப்புக்கள் பெருந் தொகையான பணத்தினைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களைச் சாடிவருகின்றனர்.
இன்னுமொரு சிங்கள-முஸ்லிம் கலவரத்தினை இந்நாட்டில் ஏற்படுத்த பொதுபலசேனா போன்ற சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான கலவரங்களை ஏற்படுத்தி வட கிழக்கிலும் வட கிழக்கிற்கு வெளியேயும் சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வருவதற்காகவே இவ்வாறான விடயங்கள் இடம்பெற்று வருகின்றன
.
சிங்களவர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது போனால் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நிலைப்பாடு தோன்றும் ஆகையால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் செறிந்துள்ள வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற நிலை இதன்மூலம் தோன்றும் என்ற பின்னூட்டல் சக்திகளாலேயே இவ்விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தினை நன்கு புரிந்து செயற்பட வேண்டிய தருணத்தில் நாமிருந்து கொண்டிருக்கின்றோம்.
வட மாகாணத்தோடு கிழக்கை இணைப்பது பற்றி வட மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எமது கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்தோடு இணைப்பதற்கு எந்தத் தேவையும் கிடையாது என கிழக்கு மாகாண சபையில் இதுவரை எந்தத் தீர்மானத்தினையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றியிருக்கின்றாரா என நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன். அதற்கான முதுகெலும்பு அவரிடத்தில் இல்லை என்று அடித்துக் கூறுகின்றேன். எமது மக்களையும் சமூகத்தினையும் எண்ணிப்பார்க்காத இவர்களெல்லாம் முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றதென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஊடகம், அரசியல், பதவி போன்ற விடயங்களில் தர்மம் இருக்க வேண்டும். அந்தத் தர்மத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். பத்திரிகை ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும், நூலாசிரியர்களும் எல்லாத் திறமைசாலிகளை விடவும் மிக முக்கியமானவர்கள்.
ஆனால் அவ்வாறானவர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் மனங்களில் உறுதியும் மன நிலை மாற்றமும் வேண்டும். ஒரு விடயத்தினை எடுத்துக் கொண்டால் எமது புத்திக் கூர்மையின் அடிப்படையில் ஒரு விடயத்தினை ஒருவரால் வாழ்த்த வைக்கவும் முடியும். வஞ்சிக்க வைக்கவும் முடியும்.
ஆக்கவும் முடியும் அழிக்க வைக்கவும் முடியும். ஆனால் அனைத்து விடயங்களையும் மனச்சாட்சியின் அடிப்படையில் சமநிலைப்படுத்தி தர்மத்தின் அடிப்படையில் அவ்விடயங்கள் வெளி உலகிற்குச் சொல்ல வேண்டும். அதற்காக ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பற்று நடு நிலைமையுடன் செயற்பட வேண்டும்.
ஒரு விடயம் நடைபெறுகின்றபோது அவ்விடயத்தின்பால் சமூகத்திற்கு நன்மை கிடைக்குமென்றால் அதனை பெரிது படுத்துவதும், அவ்விடயத்தில் சமூகத்திற்கு தீமையும் பிரச்சினையும் நஷ்டமும் ஏற்படப் போகின்றதென்றால் அதனை மறைத்தும் விடுவதும் வேண்டும்.
ஊடகவியலாளர்கள் ஒரு விடயத்தில் உள்ள நன்மை தீமை பற்றி நன்கு புலனாய்வு செய்து தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வெளிஉலகிற்குச் சொல்ல வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment