முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுமாறு கோரவில்லை திருமண வயதைத் தான் 16 ஆக
அதிகரிக்குமாறு நிபந்தனை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங்
மார்க்க நேற்று கூறியதாக விடிவெள்ளி போன்ற பத்திரிக்கைகள் செய்தி
வெளியிட்டுள்ளதே இதன் உண்மை என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட இருக்கிற இன்னேரத்தில் இது தொடர்பில் விபரமில்லாமல் சிலர் பேசி
வருகிற காரணத்தினால் இது தொடர்பான இவ்விளக்கம் எழுதப்படுகிறது.
வயதெல்லையைத் தான் 16 ஆக மாற்றுமாறு தாம் நிபந்தனை விதிப்பதாக ஐரோப்பிய
ஒன்றியத்தின் தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி
வெளியிட்டுள்ளன.
இப்படியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதே சிலரது கேள்வியாகும்.
முதலில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஒரு அடிப்படையான விஷயத்தை தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம்கள் சார்ந்த முஸ்லிம் தனியார்
சட்டத்தில் திருந்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் இலங்கை முஸ்லிம்கள்
மத்தியில் கருத்து முரண்பாடு கிடையாது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று 2009ம்
ஆண்டு மிலிந்த மொரகொட அவர்கள் நீதி அமைச்சராக இருக்கும் போதே முன்னால்
நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குறித்த குழு
அமைக்கப்பட்டதை யாரும் அப்போதும் எதிர்க்க வில்லை. இப்போதும் எதிர்க்க
வில்லை. சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் இஸ்லாத்தின்
அடிப்படைகளான குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான அடிப்படைகளின் படி சரி
பார்க்கப் பட்டு சமுதாயத் தலைமைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டு
சட்டமாக்கப்படலாம் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், தற்போதைய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மூலம் தற்போது நியமிக்கப்பட்ட குழு எதற்காக நியமிக்கப்பட்டது?
GSP+ என்கிற தீர்வை வரியை ஐரோப்பிய யூனியனில் இருந்து பெற்றுக்
கொள்வதற்காகவே முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் செய்யப்பட விருப்பதாகவும்
அதற்காகவே இப்புதிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சாகல
ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிக்கையாளர்
மாநாட்டில் தெளிவாக அறிவித்தார்.
GSP+ வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்?
முஸ்லிம் பெண்களின் திருமண வயது வரம்பு 16 ஆக இருக்க வேண்டுமா? 18 ஆக
இருக்க வேண்டுமா? 14 அல்லது 12 ஆகவா இருக்க வேண்டும் என்பதைப்
பற்றியெல்லாம் முஸ்லிம் சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஐரோப்பிய யூனியன் எப்படி
தீர்மானிக்க முடியும்? அதற்கு எப்படி இலங்கை அரசு ஒப்புக் கொள்ள முடியும்?
இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்திற்கான அடிப்படை கேள்வி.
முஸ்லிம் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும்? முஸ்லிம்கள் எதனை சாப்பிட
வேண்டும்? முஸ்லிம்கள் எப்படி, எதனை படிக்க வேண்டும்? முஸ்லிம்கள் எப்படி
திருமணம் முடிக்க வேண்டும்? யாரை முடிக்க வேண்டும்? எத்தனை வயதில் முடிக்க
வேண்டும்? என்பதையெல்லாம் இந்த சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர
ஐரோப்பிய யூனியனோ, இலங்கை அரசோ அந்த முடிவை எடுக்கக் கூடாது என்பதை இந்த
சமுதாயம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திருத்தம் செய்வது பிரச்சினையா? யாரின் தேவைக்காக? யார் திருத்துவது என்பது பிரச்சினையா?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் இந்த சமுதாயத்தில்
யாரும் பிரச்சினை படவில்லை. அனைவரும் அதில் ஒத்த கருத்தில் தான்
இருக்கிறார்கள்.
பிரச்சினை என்னவெனில் யாரின் தேவையாக இப்போது திருத்துகிறார்கள்?
ஐரோப்பிய யூனியனின் தேவைக்காக GSP+ க்காக திருத்தப் போகிறார்கள். இதனைத்
தான் இப்போது தவ்ஹீத் ஜமாஅத் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
GSP+ நாட்டுக்குத் தேவை என்பதினால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் என்ன நியாயம் உள்ளது.
GSP+ எவ்வளவு நாட்டுக்கு முக்கியமோ அதனை விட முஸ்லிம்களின் உரிமை,
முஸ்லிம்களுக்கு முக்கியம். அதில் யாரும் கை வைக்க இடமளிக்க முடியாது.
ஆகவே தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதில் இயக்க
வேறுபாடுகளை மறந்து அனைவரும் பங்கெடுப்பது கட்டாயக் கடமை என்பதை உணர்ந்து
குடும்பத்துடன் பங்கெடுக்க வேண்டும் என்பதே நடுநிலை சமுதாயத்தில்
நிலைபாடாகும்.
-ஹிபா-

0 comments:
Post a Comment