திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி முழுமையாக
இயங்கச் செய்யப்பட்டால், ஆசியப் பிராந்தியத்துக்கே எண்ணெய் விநியோகத்தை
சிறிலங்காவினால் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் அமைச்சர் கலாநிதி
சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட
அமைச்சரவை உபகுழுவின் தலைவரான கலாநிதி சரத் அமுனுகம அதுபற்றி தகவல்
வெளியிடுகையில்,
“பெற்றோலியக் கூட்டுத்தாபனம், குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுவதற்குத் தவறியதே, இந்த நெருக்கடிக்கு பிரதான காரணம்.
செயற்கைத் தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
மக்களின் நாளாந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கம்
பொறுப்பேற்கிறது. குறைந்தபட்ச கையிருப்பை மேற்கொள்ளத் தவறிய, பெற்றோலியக்
கூட்டுத்தாபன நிர்வாகத்தின் செயலை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.
பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடம், 90000 மெட்றிக் தொன் எரிபொருளை
களஞ்சியப்படுத்தும் வசதிகள் உள்ளன. ஆனால் 20000 மெட்றிக் தொன் எரிபொருள்
கூட கையிருப்பில் இருக்கவில்லை. குறைந்தபட்ச கையிருப்பை பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் பேணத்தவறியமைக்கு எந்தக் காரணமும் இல்லை.
எண்ணெய் களஞ்சியப்படுத்தும் வசதிகளை அதிகரிக்க வேண்டும். திருகோணமலையில்
உள்ள எண்ணெய்க் களஞ்சியங்களை முழுமையாக இயங்கச் செய்தால், ஆசியா
முழுவதற்கும் எம்மால் எரிபொருளை விநியோகிக்க முடியும்” என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment