- யூ.கே.காலித்தீன் -
கல்முனை நகரத்தில் தனியார் போக்குவரத்து பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு நீண்ட காலமாக இடம் ஒதுக்கப்படாமையை கண்டித்தும், இணைந்த சேவையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டியும் இன்று நாள் முழுவதும் தனியார் போக்குவரத்து பஸ்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதனால், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், பொத்துவில், அம்பாரை போன்ற பல இடங்களுக்கு தனியார் பஸ் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை. நேற்று காலை முதல் பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.
கல்முனை நகரில் ஏற்கனவே தனியார் போக்குவரத்து பஸ்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினையும், பஸ் பயணிகளின் தங்குமிடத்தையும் கல்முனை மாநகர சபை தனியார் வங்கி ஒன்றுக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கியுள்ளது.
மேற்படி தனியார் போக்குவரத்து பஸ்கள் கல்முனை நகரின் பிரதான வீதியின் ஒரங்களிலேயே நிறுத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இதனால், தனியார் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும், நடத்துநர்களும், பயணிகளும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
போக்குவரத்து நெருசல்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் தங்களுக்கு தனியான பஸ் தரிப்பு நிலையம் அமைத்துத் தரப்பட வேண்டுமென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றார்கள்.
மேலும். கல்முனையில் அரசாங்கத்தின் இலங்கை போக்குவரத்து பஸ்களை நிறுத்துவதற்கு தனியாக பஸ் தரிப்பு நிலையம் உள்ளது. ஆனால், தனியார் பஸ்களையும் நிறுத்துவதற்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இணைந்த சேவையின் அடிப்படையில் செயற்படுகின்ற போது கல்முனையில்; மாத்திரம் இணைந்த சேவையை வழங்குவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.
இன்று காலை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் 'கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையே எங்களுக்கு நீதி இல்லையா?' மாநகர சபையே அரச வரியை நல்ல முறையில் செலுத்துகின்றோம். எங்களைப் புறக்கணிக்காதே!, இணைந்த சேவையையும், நிரந்த தரிப்பிடத்தையும் கோருகின்றோம், நீதி கிடைக்கும் வரை போராடாடுவோம்' போன்ற சுலோகங்களையும் ஏந்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்



0 comments:
Post a Comment