சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஞானசார தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்குத் தீர்ப்பு சம்பந்தமாக எழுந்துள்ள சட்ட சிக்கல்கள் மூன்றை முன்வைக்க வேண்டும் என்றும், எனினும் அவற்றை எழுத்து மூலம் தயார் செய்ய முடியவில்லை என்றும் இன்றைய தினம் அதனை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 31ம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .
அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது.
0 comments:
Post a Comment