முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அமைச்சு பொறுப்புக்களை ஒருபோதும் ஏற்பதில்லை என்று கடந்த முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு தீர்மாணிக்கப்பட்டும், கல்முனை பிரச்சினைகள் உற்பட முஸ்லிம்களின் எந்தவித பிரச்சினைகளும் தீர்க்கப்படாமலும், மீண்டும் அதியுயர்பீடம் கூட்டப்பட்டு அதில் தீர்மானம் எடுக்கப்படாமலும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது ஆரோக்கியமான விடயமல்ல.
அவ்வாறு அவசரப்பட்டு பதவிகளை பொறுப்பேற்பதற்கான எந்தவித தேவைகளும் முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை. மக்கள் அவ்வாறு கோரவுமில்லை.
இந்த நாட்டு முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி முஸ்லிம் காங்கிரசாகும். ஏனைய முஸ்லிம் உதிரிக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பதவிக்காக உருவாக்கப்பட்டதாகும். அவர்கள் என்னதான் தீர்மானம் எடுத்தாலும் அல்லது அமைச்சு பொறுப்புக்களை பெற்றாலும் அதனை யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
ஆனால் முஸ்லிம் காங்கிரசின் நிலைமை அவ்வாறல்ல. இந்நாட்டு முஸ்லிம்களின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக பார்க்கப்படுவதுடன், மு.கா எடுக்கின்ற தீர்மானத்தினையே பேரினவாதிகளும், சர்வதேச சமூகமும் உற்று நோக்குகின்றது.
அமைச்சு பதவிகளை ராஜினமா செய்ததிலிருந்து இன்று வரைக்கும் மீண்டும் அப்பதவிகளை பொறுப்பேற்குமாறு பிரதமர் ரணில் முஸ்லிம் காங்கிரசுக்கு அழுத்தம் வழங்கி வருகின்றார்.
அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முஸ்லிம் மக்களின் எந்தவித பிரச்சினைகளையும் தீர்க்காமல், வெறுமனவே இனிப்பான வாக்குறுதிகளை மட்டும் வழங்கிக்கொண்டு பதவிகளை பாரமெடுங்கள் என்று கூறுவதனை ஒருபோதும் ஏற்க முடியாது.
முஸ்லிம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்காவது தீர்வினை வழங்கிவிட்டு அமைச்சு பதவிகளை பாரமெடுங்கள் என்று ரணில் கூறியிருந்தால் அதனை நாங்கள் பரிசீலிக்கலாம்.
ஆனால் அவ்வாறு எந்த தீர்வும் வழங்காமல் பதவிகளை மட்டும் பொறுப்பேற்குமாறு அழுத்தம் வழங்குகின்றபோதுதான் சில சந்தேகங்களும் எழுகின்றது.
அதாவது முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத சூழ்நிலையில் தங்களது பிரதிநிதிகள் அமைச்சு பொறுப்புக்களை பாரமெடுப்பதனை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. அவ்வாறானவர்களை துரோகிகளாகவே முஸ்லிம்கள் பார்ப்பார்கள் என்பது ரணிலுக்கு தெரியாமலில்லை.
ரணில் மட்டுமல்ல எந்தவொரு பேரினவாத தேசிய கட்சிகளும் சிறுபான்மை சமூக கட்சிகளை அழிப்பதற்கும், துண்டாடுவதற்கும் தயங்கியதில்லை. சந்தர்ப்பம் பார்த்து காய் நகர்த்தி கட்சிகளை துண்டாடுவதனை பலதடவைகள் இலங்கை அரசியலில் நாங்கள் கண்டுள்ளோம்.
அதனாலேயே முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியான முஸ்லிம் காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்துவிட்டு, தனது ஐ.தே கட்சியை மீண்டும் முஸ்லிம் பிரதேசங்களில் வளர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே அமைச்சு பதவிகளை ஏற்குமாறு மு.காங்கிரசுக்கு ரணில் வழங்குகின்ற அழுத்தமாகும்.
எது எப்படி இருப்பினும் முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும், மக்களின் விருப்பமின்றியும் அவசரப்பட்டு அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதானது மக்கள் நலனைவிட தங்களது பதவிகளும், சொகுசுகளுமே முக்கியம் என்பதனை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமையும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments:
Post a Comment