பெற்றிகலோ கெம்பஸ் (batticaloa campus) நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியாது. அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கூட எமது நிறுவனத்தை கைப்பற்ற முடியாது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து 50: 50 என்ற அடிப்படையில் நிருவாகத்தை பங்கிட நாம் தயார் என ‘பெற்றிகலோ கெம்பஸ்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (30) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உயிர்த்த தாக்குதலின் பின்னர் எமது நிறுவனம் மீதும் என்மீதும் மிக மோசமான அவதூறான கருத்துக்களை ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் சில தனி நபர்கள் முன்வைத்து வருகின்றனர் இந்நிலையில் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தலைமையில் கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டு பெற்றிகலோ கெம்பஸ் குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதுடன் அந்த அறிக்கை இப்போது அமைச்சரவைக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாக கூறியுள்ளனர். எனினும் ஆசு மாரசிங்க தொடர்ச்சியாக என்மீதும் பெற்றிகலோ கெம்பஸ் தொடர்பிலும் மோசமான கருத்துக்களை ஊடகங்கள் முன்னிலையில் கூறி வருகின்றார்.
அதனையடுத்தே அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம். ஆசு மாரசிங்க தனது தனிப்பட்ட கருத்துகள் பலவற்றை அவர் தயாரித்த அறிக்கையில் முன்வைத்துள்ளார். எனினும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சகல கேள்விகளுக்கும் ஆதாரத்துடன் நாம் பதில் அறிக்கை முன்வைத்துள்ளோம். குறிப்பாக பெற்றிகலோ கெம்பஸ் நிறுவனத்தை அரச மயப்படுத்த வேண்டும். பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்களை அவர் கூறியுள்ளார். அத்துடன் எமக்கு வழங்கப்பட்ட 35 ஏக்கருக்கு அப்பால் எட்டு ஏக்கர் நிலத்தை நாம் அபகரித்துள்ளோம் என்ற காரணிகளை கூறியுள்ளார்.
உண்மையில் பட்டிகளோ கம்பஸ் நிறுவனம் பல்கலைக்கழகம் என நாம் பதிவுசெய்யவில்லை. உயர்கல்வி அமைப்பு மூலமாக வழங்கப்பட்ட காசோலைகளில் தான் அவ்வாறான பதிவுகள் உள்ளது. இது எமது தவறு அல்ல. கல்லூரியை தரமுயர்த்த நாம் கோரிக்கை விடுத்த நேரத்தில் உயர்கல்வி அமைச்சு அங்கீகார பத்திரத்தில் பல்கலைக்கழகம் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 35 ஏக்கர் நிலத்துக்கு அப்பால் நாம் நிலங்களை அபகரிக்கவும் இல்லை.
மேலும் இலங்கை முதலீட்டு சபையின் அங்கீகாரத்துடன் நாம் எமக்கான கடன் தொகையை பெற்றுள்ளோம். அதுவும் இரண்டு தடவைகள் எமக்கான கடன் தொகை வழங்கப்பட்டுள்ள அறிக்கையை ஆதாரத்துடன் நாம் முதலீட்டு சபையிடம் முன்வைத்துள்ளோம். முதல் தடவை 295 மில்லியன் ரூபாயும் இரண்டாவது தடவை 560 மில்லியன் ரூபாயும் வழங்கியதற்கான ஆதாரங்களை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஆகவே நாம் இரகசியமாக பணம் பெற்றதாக கூறும் காரணிகள் முழுப்பொய்யாகும்.
அதேபோல் 1750 கோடி ரூபாய் பெற்றதாக அதுவும் சவூதி அரேபியாவின் தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூலமாக பெற்றதாக சிங்கள நாளிதழ்களில் தலைப்புச்செய்திகள் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை நாம் குறித்த சவூதி நிருவனத்துடம் இருந்து 360 கோடி ரூபாய்களை மட்டுமே பெற்றுள்ளோம். அதேபோல் அந்த நிறுவனம் சவூதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐ. எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு பணம் கொடுத்ததாக கதைகளை திரிபுபடுத்தி எம்மை நெருக்கடிக்குள் தள்ள ஒரு சில அரசியல் வாதிகள் முயற்சிகளை எடுக்கின்றனர் என்றார்.
Metronews.lk -



0 comments:
Post a Comment