• Latest News

    August 30, 2019

    சஜின்வாஸின் தகவல்களினால் ராஜபக்ச குடும்பம் அரசியல் நெருக்கடியில்?

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது வீரர்களை போன்று பேசுபவர்களை விட அந்த கட்சிக்குள் இருக்கும் உண்மையான நிலைமை தனக்கு தெரியும் எனவும் அவை அனைத்தையும் எதிர்கால அரசியல் நிலைமைக்கு அமைய வெளியிடப் போவதாகவும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
    விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துடன் மிக நெருங்கி செயற்பட்ட தனக்கு பத்திரிகைகளில் வெளியாகும் தகவல்களை விட அதிகமான தகவல்கள் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    தனக்கு எதிராக நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க உண்மையை கூற எதிர்பார்த்துள்ளதாகவும் சஜின்வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
    சஜின்வாஸ் குணவர்தன, ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிக நெருக்கமானவர் என்ற ரீதியில் பிரபலமாக இருந்தார்.
    ராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளின் அடிப்படையில், நடந்த கொடுக்கல், வாங்கல் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    மூன்று முறையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சஜின்வாஸ், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
    அவருக்கு எதிரான வழக்குகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த பின்னணியில், சஜின்வாஸ் வெளியிடப் போவதாக கூறும் தகவல்கள் காரணமாக ராஜபக்ச குடும்பம் அரசியல் ரீதியாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக தனது மைத்துனர் நிஷாந்த விக்ரமசிங்கவை நியமித்திருந்தார். மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் தலைவராக சஜின்வாஸ் குணவர்தன செயற்பட்டதுடன் நாமல் ராஜபக்சவின் வர்த்தக நடவடிக்கைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
    இந்த நிலையில், விசேட செய்தியாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள சஜின்வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலானது ஒரு குடும்பத்தின் பரம்பரையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
    தேர்தலில் வெற்றி பெறுவது மற்றும் பரம்பரையை பாதுகாப்பது என்பன இருவேறு விடயங்கள். ஜனாதிபதித் தேர்தல் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆமைக்கும் முயலுக்குமான போட்டியாக இருக்கும். போட்டியில் முயலுக்கு ஏற்பட்ட நிலைமையே கோத்தபாயவுக்கு எற்படும்.
    ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஆமை, முயல் போட்டியை போன்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்ற மகுடத்தை சூடிக்கொண்டு ஒருவர் ஓட ஆரம்பித்துள்ளார்.
    பொதுஜன பெரமுன நிறுத்தியுள்ள வேட்பாளருக்கு நாட்டின் மக்கள் தொகையின் இன விகிதாசாரம் குறித்து எந்த அறிவும் கிடையாது. அவர் இனவாதிகளுடன் சென்று தோல்வியடைவது நிச்சயம்.
    நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மக்களை அழைத்துச் சென்றதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்படியான நிலைமையை ஏற்படுத்திக்கொண்டது எனது தவறு.
    எனினும் காலியில் நான் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. பொதுஜன பெரமுனவை தவிர்த்து, நாட்டுக்கு வெற்றியை தேடித் தரக் கூடிய, நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க கூடிய அரசியல் அணியை தெரிவு செய்து, மக்களுடன் இணைந்து செயற்படுவேன்.
    பொதுஜன பெரமுன தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பின்னால் ஓடுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி, ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ள மிகப் பெரிய அரசியல் கூட்டணியுடன் மோத முடியாது என்பதை பொதுஜன பெரமுன உணர்ந்துக்கொண்டுள்ளது.
    ஆமை, முயல் போட்டியை போல் அல்லாமல், ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுன ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் சஜின்வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
    எது எப்படி இருந்த போதிலும் சஜின்வாஸ் குணவர்தன வெளியிட்டுள்ள கருத்துக்கு இணையான கருத்தை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கடந்த 27ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த அவர், தமது தரப்பு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்துவது அத்தியவசியமானது எனக் கூறியிருந்தார்.
    இரண்டு கட்சிகள் இடையிலான கூட்டணி குறித்து தான் மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் மகிந்த - மைத்திரி சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளை இறுதிக்கட்டத்திற்கு கொண்டு வர தயாராக இருப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஜின்வாஸின் தகவல்களினால் ராஜபக்ச குடும்பம் அரசியல் நெருக்கடியில்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top