ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில்
நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவது என இணக்கம்
ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என
பகிரங்கமாக கூறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில்
போட்டியிட வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வரும்
கருத்துக்கள் குறித்து தேசிய பத்திரிகை ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உட்பட 15 கட்சிகள் இணைந்தே ஸ்ரீலங்கா
சுதந்திர பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு
உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இந்த
புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு முரணான கருத்தக்களை வெளியிடுவது
இணக்கப்பாடுகளுக்கு தடையாக அமையும்.பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பொதுத் தேர்தலில்
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது என இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்த
இணக்கப்பாட்டை மீறுவது சிறந்ததாக இருக்காது.
தாமரை மொட்டுச்
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பொறுப்புக் கூற கூடிய நபர்கள் எவரும்
கூறாத காரணத்தினால், அது பற்றி குழப்பமடைய தேவையில்லை என சுதந்திரக்
கட்சியின் அந்த சிரேஷ்ட உறுப்பினர் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத்
தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை பலத்தை பெற முடியும் என மின்சக்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித்த
அபேகுணவர்தன கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தாமரை மொட்டுச் சின்னத்தில்
போட்டியிடுவது வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

0 comments:
Post a Comment