• Latest News

    December 02, 2019

    இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி கோத்தாபாய வேண்டுகோள்

    பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 
    தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்ததுடன், வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 
    இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார். 
    போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 
    பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதிற் கடமை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

    மொஹான் கருணாரத்ன
    பிரதிப் பணிப்பாளர்
    ஜனாதிபதி ஊடகப் பிரிவு
    2019.12.02
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி கோத்தாபாய வேண்டுகோள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top