நிந்தவூர் கமு / அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்புக்களுக்கு இன்னும் கணித பாடத்தைக் கறிப்பிப்பதற்கு ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என பெற்றோர்களும், மாணவிகளும் விசனம் தெரிவிக்கின்றார்கள்.2020ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையில் முக்கியமான இரு வகுப்புக்களுக்கு கணிதப் பாடத்தை கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு பாட அட்டவனை வழங்காது இருப்பது பாடசாலை நிர்வாகத்தின் மெத்தனப் போக்காகும். இப்பாடசாலையில் ஏனைய வகுப்புக்களுக்கு கணித பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் நியமிக்கட்டுள்ள நிலையில் இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கும், 2021ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கும் கணித பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களை பணிக்காது விடப்பட்டுள்ளமை மிகப் பெரிய தவறாகும்.
இதே வேளை, இவ்வருடம் நடைபெற்ற வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் போது நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11 ஆகிய வகுப்புக்களுக்கு கணித பாடத்தை கற்பித்த இரு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு பதில் ஆசிரியர்களை கல்முனை வலயக் கல்வி அலுவலகம் நியமித்த போதிலும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் இன்னும் நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் கடமையை ஏற்றுக் கொள்ளாது, தொடர்ந்தும் கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரியில் ஒப்பமிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் இந்த ஆசிரியர்களை விடுவிக்காது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே வேளை, மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு பாட அட்டவணை வழங்காது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்காது இருப்பது கல்வி அலுவலகத்தின் பெர்றுப்பற்ற செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதே வேளை, நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை தரம் 10, 11 வகுப்பு மாணவிகளின் கணித பாட கற்பித்தல் நடைபெறாது இருப்பது அந்த மாணவிகளுக்குச் செய்யும் துரோகமாகும்.
இதே வேளை, பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் போதிய கவனம் செலுத்தாது ஆசிரியர் வந்தால் பார்ப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, இன்று ஆசிரியர் வருவார், நாளை ஆசிரியர் வருவார் என்று பெற்றோர்களையும், மாணவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment